கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக ரூ. 5.5. கோடியில் பிரமாண்ட பந்தல்
கோவை: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக ரூ. 5.5 கோடியில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ஏளது.
கிட்டத்தட்ட நாலரை லட்சம் சதுரஅடி பரப்பளவில் இந்த பந்தல் அமைக்கப்படவுள்ளது.
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வருகிற ஜுன் மாதம் 23 ந் தேதி முதல் 27 ந் தேதி வரை நடக்கிறது. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவை கொடீசியா வளாகத்தில் நடக்கிறது. இதற்காக ரூ.5.5 கோடி செலவில் பந்தல் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
இதற்கான பந்தக்கால் நடும் பணி நேற்று காலை நடந்தது. இதில் கலெக்டர் உமாநாத் கலந்து கொண்டு பந்தக் காலை நட்டு பணியை தொடங்கி வைத்தார். மாநாட்டு சிறப்பு பணி அதிகாரி பிரபாகரன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சம்பத், செயற்பொறியாளர் முருகேசன், நடராஜன், பந்தல் அமைப்பாளர் தஞ்சை சிவா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதிதாக அமைக்கப்படும் பந்தல் ஆயிரம் அடி நீளத்திலும், 440 அடி அகலத்திலும் இருக்கும். மேடை 80 அடி நீளத்திலும், 60 அடி அகலத்திலும் உருவாக்கப்படுகிறது. பந்தலின் உயரம் 30 அடி உயரம். சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்படும் மேடையின் பின்புறம் முக்கிய பிரமுகர்களுக்காக 2 ஓய்வு அறைகள் கட்டப்படுகின்றன.
இந்த பந்தல் 60 ஆயிரம் பேர் இருக்கையில் அமரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது. மாநாட்டு பந்தலின் இரு புறமும் தலா 20 அடி அகலத்திற்கு இடம் காலியாக விடப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட உள்ளது.
மாநாட்டு பந்தலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக சிறிய அளவிலான இரண்டு மேடைகள் அமைக்கப்பட உள்ளன. முக்கிய பிரமுகர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்கும் தனித்தனியே தடுப்புகள் அமைக்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட உள்ளது. பந்தல் அமைப்பதற்காக ஆயிரம் இரும்பு தூண்கள் கொண்டு வரப்படுகின்றன. பந்தலின் மேற்கூரை முழுவதும் இரும்பு தகடுகள் கொண்டு பொருத்தப்படுகின்றன. பந்தல் அமைக்கும் பணியில் தினமும் 200 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பந்தலின் உள்புறம் சோழ மன்னர் காலத்து அரண்மனையை போன்று அலங்கரிக்கப்படுகிறது. எழிலார்ந்த நுண்கலை மாடங்கள், தர்பார்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக திருவாரூரில் இருந்து கலை நிபுணர்கள் வரவழைக்கப்படுகின்றனர். மேலும் பந்தலின் உள்புறத்தை அலங்கரிப்பதற்காக கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் கலைஞர்கள் வருகிறார்கள்.
பந்தலின் உள்புறம் பொருத்துவதற்காக ராஜஸ்தான், ஜெய்ப்பூர், சூரத், ஆகிய இடங்களிலிருந்து அலங்கார பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. இவை அனைத்தும் ஜுன் முதல் வாரத்தில் கோவை வந்து சேருகின்றன. பந்தல் அமைக்கப்படும் இடம் ஏற்கனவே சமப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பலத்த மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட உள்ளே செல்லாதவாறும், கடுமையான காற்று வீசினாலும் பந்தல் சாயாத வகையில் உறுதியாக அமைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications