கசாப்புக்கு தூக்குத் தண்டனை- நிறைவேற்றத்தான் ஆள் இல்லை!

மிகுந்த அனுபவம் உடையவர்களைத்தான் தூக்குத் தண்டனைக் கைதிகளை தூக்கிலிடுவதற்கு அழைப்பார்கள். ஆனால் நமதுநாட்டில் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு கயிறு மாட்டி விடுவோரின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்துதான் தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் சிறைத் துறையினர்.
இப்போது கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதாக தோன்றவில்லை.
காரணம் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறையிலும் தூக்கு கயிறை மாட்டும் நபர் யாரும் இல்லையாம். மும்பையிலும் கூட யாரும் இல்லையாம்.
இங்கு மட்டுமில்லை, டெல்லி திகார் சிறையிலும் கூட தூக்கு மாட்ட ஆள் கிடையாது. கடைசியாக திகாரில் 1989ம் ஆண்டுதான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்குவங்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இங்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களை வரவழைத்துதான் நிறைவேற்றினார்களாம்.
ஒருவேளை தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆளே கிடைக்காவிட்டால், காவல்துறையைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும், இதைச் செய்ய முன் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என விதிமுறையில் உள்ளதாம்.
தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்-வைஷாலி:
இந் நிலையில் அஜ்மல் கசாபுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை அப்சல் குருவுக்கு தாமதிக்கப்படுவது போல் தாமதிக்காமல் உடனே நிறைவேற்ற வேண்டும் என அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட போலீஸ் எஸ்ஐ துக்காராம் ஓம்பலேயின் மகள் வைஷாலி ஓம்பலே கூறியுள்ளார்.
தெற்கு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று அஜ்மல் கசாபை பிடிக்க முயன்ற போது, கசாப் துப்பாக்கியால் சுட்டதில் துக்காராம் உயிரிழந்தார். ஆனாலும் அவரால் தான் அஜ்மல் கசாப் பிடிபட்டான்.
இந் நிலையில் ஓம்பலேவின் மகள் வைஷாலி கூறுகையில், கசாபுக்கு தூக்கு என்ற தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பின் மூலம் என் தந்தையின் தியாகத்திற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது.
மும்பை தாக்குதல்களில் தொடர்புடைய பலர் இன்னமும் பாகிஸ்தானில் உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்க இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அரசு வேகமாக செயல்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் தாமதிக்கக் கூடாது. உடனே தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.
2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அப்சல் குருவுக்கு தாமதிக்கப்படுவது போல் அல்லாமல் கசாபுக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றார் வைஷாலி.
தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்-பாஜக:
இந் நிலையில் பாஜக தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகளால் மட்டும் இந்த தாக்குதலை நடத்தியிருக்க முடியாது. இந்தியாவிலிருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஆதரவாளர்கள் துணையுடன்தான் இதை பயங்கரவாதிகள் செய்திருப்பார்கள்.
எனவே, இந்த தாக்குதலுக்கு காரணமான அனைத்துக் குற்றவாளிகளையும், இந்த சதியின் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பயங்கரவாத செயல்களுக்கு முடிவு கட்ட முடியும்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நடந்துள்ள முழு சதியையும் முழுமையாக வெளிக்கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அப்சல் குரு தூக்கு தண்டனை பெற்றும், இன்னும் அத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் கசாபும் நடத்தப்பட்டால், சட்டம், நீதித்துறை, அரசு ஆகியவை கேலிக்குரியதாகிவிடும்.
எனவே, மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். இதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச நிம்மதியைத் தரும்.
அதேநேரத்தில் இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழும் நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான எம்.பிக்களை கொல்ல முயன்ற அப்சல் குருவின் தூக்கு தண்டனையையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications