ராஜ்யசபா தேர்தல்.. அதிமுகவுக்கு இழப்பு, பாமக கனவு 'பணால்'!
டெல்லி: தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் ஜூன் 17ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 31ம் தேதி தொடங்குகிறது.
நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 49 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக் காலம் முடிவடையவுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவை சேர்ந்த டி.டி.வி. தினகரன், மலைச்சாமி, கோவிந்தராஜர், எஸ்.அன்பழகன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், பாமகவை சேர்ந்த டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவி காலம் முடிவடைகிறது.
அதே போல உத்தரப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கும், மகாராஷ்டிரத்தில் 6 இடங்களுக்கும், பிகாரில் 5 இடங்களுக்கும், கர்நாடகம் மற்றும் ராஜஸ்தானில் தலா 4 இடங்களுக்கும், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒரிஸ்ஸாவில் தலா 3 இடங்களுக்கும், சட்டீஸ்கர், பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு இடத்துக்கும் ஜூன் 17ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அந்தந்த மாநில எம்எல்ஏக்கள் வாக்களித்து ராஜ்யசபா எம்பிக்களைத் தேர்வு செய்வர்.
பாஜகவைச் சேர்ந்த வெங்கையா நாயுடு, அருண் ஷோரி, நஜ்மா ஹெப்துல்லா, ராஜீவ் பிரதாப் ரூடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நடிகை ஜெயா பச்சன் ஆகியோர் பதவி காலம் முடிவடைய உள்ள பிரபலங்கள் ஆவர்.
இழப்பு அதிமுகவுக்கு...
தமிழகத்தில் 34 எம்.எல்.ஏக்கள் வாக்களித்து ஒரு ராஜ்யசபா எம்பியை தேர்வு செய்ய முடியும். அதன்படி திமுகவுக்கு குறைந்தபட்சம் 2 எம்பிக்களும், காங்கிரசுக்கு திமுக ஆதரவுடன் 2 எம்பிக்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு ஒரு எம்பியும் கிடைப்பர். இதன்மூலம் அதிமுகவுக்கு ராஜ்யசாவில் 3 எம்பிக்கள் குறையப் போகின்றனர்.
பாமகவின் ராஜ்யசபா கனவு 'பணால்'..
பாமக- இடதுசாரிகளின் ஆதரவு கிடைத்தால் திமுகவுக்கு இன்னொரு எம்பியும் கிடைக்கலாம். அதே நேரத்தில் இடதுசாரிகள் ஆதரவு அதிமுகவுக்குக் கிடைத்தால் அந்தக் கட்சி சார்பில் இன்னொருவர் எம்பியாக முடியும்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாமகவுடன் கூட்டணி சேர, ஒரு ராஜ்யசபா சீட்டை அந்தக் கட்சிக்குத் தருவதாக அதிமுக உறுதிமொழி தந்திருந்தது. இப்போது அந்தக் கூட்டணியே 'பணால்' ஆகிவிட்டதால் பாமகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட் இந்த முறை இல்லை என்றாகிவிட்டது.
சட்ட மேலவை: மக்களவை ஒப்புதல்:
தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை அமைப்பதற்கான மசோதா நேற்று மாலை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் மேலவை வருவது உறுதியாகிவிட்டது.
மசோதாவை எதிர்த்து அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
78 உறுப்பினர்கள் கொண்ட இந்த சட்ட மேலவையை அமைக்கப்படுவதற்கான தீர்மானம் கடந்த புதன்கிழமை ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அணு விபத்து நஷ்டஈடு மசோதா தாக்கல்:
இந் நிலையில் அணு விபத்து நஷ்டஈடு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா நிறைவேறினால் மட்டுமே, இந்திய- அமெரிக்க அணு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
இந்த மசோதாவிற்கு பாஜக, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதை தாக்கல் செய்ய மத்திய அரசு திணறி வந்தது.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோருடன் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் நாடாளுமன்ற விவாரத் துறை அமைச்சர் பி.கே. பன்சால் ஆகியோர் சந்தித்துப் பேசியதையடுத்து இந்த விஷயத்தில் அரசுக்கு தங்கள் ஆதரவை அவர்கள் தெரிவித்தனர். மேலும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் ஆதரவும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த மசோதாவை மத்திய அரசு இன்று தைரியமாக தாக்கல் செய்தது.
ஆனால், இதற்கு இடதுசாரிகள் மற்றும் பாஜககடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாதிக்கப்பட்டோர் இழப்பீடு பெறும் உரிமைக்கு மசோதாவால் கட்டுப்பாடு உள்ளது என்று பாஜக புகார் கூறியது. இந்த இரு கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
ஜனாதிபதியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு:
இந் நிலையில் மத்திய அரசு சி.பி.ஐயை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி அத்வானி தலைமையில் பாஜக தலைவர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து மனு கொடு்த்தனர்.












Click it and Unblock the Notifications