பிடிபட்டதும் லஞ்சப் பணத்தை விழுங்கிய அதிகாரி - விரலை விட்டு எடுத்தனர் போலீஸார் !
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீசாரைக் கண்டதும், லஞ்சப் பணம் ரூ 10,000 -யை விழுங்க முயன்ற மின் வாரிய அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி, தியாகராஜ நகரைச் சேர்ந்தவர் சிவபாரதி (28). டிராவல்ஸ் வைத்துள்ளார்.
இவர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, உலர் மின் சலவையகம் கட்டியுள்ளார். அதற்கு மின் இணைப்பு பெற, கடந்த ஏப்ரல் மாதம் 30 ம் தேதி மின் வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் திருப்பதி (44) என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார்.
அதற்கான அறிக்கை தயாரித்து, சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப, திருப்பதி 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து சிவபாரதி, தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில், தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் வைத்து சிவபாரதி, திருப்பதியிடம் 10,000 ரூபாயை முதற்கட்ட லஞ்சமாகக் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திருப்பதி 500 ரூபாய் நோட்டு கட்டை அப்படியே வாய்க்குள் திணித்து, விழுங்க முயன்றார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திருப்பதியின் வாய்க்குள் விரலை விட்டு, லஞ்சப்பணத்தை வெளியே இழுத்து மீட்டனர்.
இதனால், திருப்பதி வாய்க்குள் காயம் ஏற்பட்டு, லஞ்சப்பணத்தில் ரத்தக்கறை படிந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications