ராஜீவ் நினைவு நாளையொட்டி அன்னதானம், நல உதவிகளை வழங்க வேண்டுகோள்
சென்னை: ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி ஏழைகளுக்கு அன்னதானம், நல உதவிகளை வழங்குமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இந்தியாவின் உயர்வுக்கு அடித்தளமிட்ட ராஜீவ்காந்தி இந்த மண்ணில் உயிர்த் தியாகம் செய்த 19 ம் ஆண்டு நினைவு நாள் மே 21ம் தேதி வருகிறது. சோனியாகாந்தியின் வழிகாட்டுதலில் நடக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நல்ல திட்டங்களுக்கு வழிகாட்டி சென்ற தொலைநோக்கு சிந்தனையாளர் ராஜீவ்காந்தி.
கோடிக்கணக்கான இளைஞர்களின் தளபதியாக விளங்கும் ராகுல்காந்தியின் மக்கள் நலப்பணிக்கு ஒளிவிளக்காக திகழ்பவர் ராஜீவ்காந்தி. அவரது தியாகத்தையும், உலகின் புகழ்பெற்ற சாதனைகளையும் மக்களுக்கு,குறிப்பாக இளைஞர்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது நமது கடமையாகும்.
அதன்படி மே 21 ந் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட,நகர,வட்டார,கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜீவ்காந்தியின் படத்தை அலங்கரித்து வைக்க வேண்டும். அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
அன்றைய தினம் நினைவஞ்சலி கூட்டங்கள்,புனித தலங்களில் வழிபாடு, அன்னதானம், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் வேண்டுகின்றேன். அந்த நிகழ்ச்சிகளில் அப்பகுதிகளில் உள்ள எம்.பிக்கள்,எம்,எல்.ஏக்கள்,முன்னாள் எம்.பி., எம்.எல். ஏக்கள், மாவட்ட தலைவர்கள்,ஊராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications