ரூ. 5 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவியைக் கடத்திய இருவர் கைது
சிவகாசி: ரூ. 5 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவியைக் கடத்திய இரண்டு பேர் அடங்கிய கும்பலை சிவகாசி போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிவகாசியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. ஆடிட்டரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பபிதா, கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை கல்லூரிக்குப் போன இவர் மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் ராமமூர்த்தி புகார் கொடுத்தார்.
போலீஸார் பபிதாவை கண்டுபிடிக்க நடவடிக்கையைத் தொடங்கினர். இந்த நிலையில் ராமமூர்த்திக்கு ஒருவர் போன் செய்து, உங்கள் மகளை நாங்கள்தான் கடத்தியுள்ளோம். ரூ. 5 லட்சம் பணம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என கூறியுள்ளனர்.
பின்னர் மீண்டும் ஒருமுறை ராமமூர்த்தியை தொடர்பு கொண்டார் அந்த மர்ம நபர். இதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்தார் ராமமூர்த்தி.
போலீஸார் நடத்திய விசாரணையில்,இரு செல்போன் அழைப்புளும், சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையிலிருந்து வந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். அந்த சாலையில் உள்ள வனப் பகுதியில் பபிதா அடைத்துவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்து அங்கு விரைந்து சென்று பபிதாவை மீட்டனர்.
அவரை கடத்தி வைத்திருந்த முத்துப்பாண்டி, மதன்குமார் ஆகிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்னர். மேலும் இருவர் தலைமறைவாகி விட்டனர்.