பொறியியல் கல்லூரிகளில் சேர பிற்பட்டோருக்கு 45%, தாழ்த்தப்பட்டோருக்கு 35% போதும்!
இதன்படி பொதுப் பிரிவு மாணவர்கள் பிளஸ் டூவில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இது 55 சதவீதமாக இருந்தது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போது. இது கடந்த ஆண்டு 50 சதவீதமாக இருந்தது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தாலே பொறியியல் கல்லூரிகளி்ல் சேரலாம்.
இந்த அறிவிப்பை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை மேலும் குறைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்கள்.
அண்டை மாநிலங்களில் இருப்பது போல பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்றாலே மாணவர்களை பொறியியல் கல்லூரிகளில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமென்றும் அவர்கள் அரசை கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து முதல்வர் கருணாநிதி ஆலோசித்து அட்மிஷனுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை மேலும் குறைக்க அனுமதி வழங்கினார்.
அதன்படி இதுவரை பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு பொது பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லையெனவும் குறைந்தபட்ச மதிப்பெண் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவ்வாண்டு பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும். மாணவர்களின் விருப்பமும் நிறைவேறும். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும்.
அட்மிஷனுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டிருப்பதுடன் ஒரு குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவருக்குரிய பொறியியல் படிப்பு கல்விக் கட்டண தொகையை அரசே செலுத்துவதாலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் 30,000 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு நிச்சயமாக அந்த நிலை இருக்காது. பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பம் அளிப்பதற்கான கடைசி நாள் இம்மாதம் 31ம் தேதியாகும். இதனை மேலும் கால நீட்டிப்பு செய்ய அவசியம் இருக்காது.
தமிழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு பிளஸ் டூ மதி்ப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.