சென்னையில் மழை ஓய்ந்தது-வெள்ளத்தால் ரயில்கள் ரத்து!

லைலா புயலால் சென்னை நகரம் படாதபாடு பட்டு விட்டது. ஒரே நாள் மழையால் நகரமே, நரகமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு, மரங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்து, சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகனங்கள் கவிழ்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு என மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி விட்டார்கள்.
இப்படி சென்னை மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய லைலா இப்போது முற்றிலும் ஆந்திரப் பகுதிக்குப் போய் விட்டது. இதனால் நேற்று நள்ளிரவிலிருந்து சென்னையில் மழையும், காற்றும் ஓய்ந்துவிட்டது.
ஆனாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரயில்கள் ரத்து..பாதை மாற்றம்:
கனமழை காரணமாக சென்னையிலிருந்து ஆந்திரா வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரலில் இருந்து புறப்பட இருந்த விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ், ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகியநை ரத்து செய்யப்பட்டுவிட்டன.
சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட விஜயவாடா ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர், விஜயவாடா இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டது.
விஜயவாடா- சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் விஜயவாடாவில் இருந்து சிங்கஜ்ஜம் வரைதான் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னைக்கு வராது.
சென்னை சென்ட்ரல்- அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி- நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்- முசாபர்பூர் எக்ஸ்பிரஸ், சென்னை சென்டிரல்- டெஹ்ராடூன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- வாரணாசி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரேணிகுண்டா- தோனே, கஞ்சேகுடா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி- நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- வாரணாசி எக்ஸ்பிரஸ் ஆகியவை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.












Click it and Unblock the Notifications