அருப்புக்கோட்டையில் கொள்ளையர்களுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்ட போலீஸார்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கொள்ளையடிக்க வந்த கும்பலுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர். இதில்,திருடர்கள் மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அருப்புக்கோட்டை ஜெயராம் நகர் பகுதியில் போலீஸ்காரர்கள் கணேசன், கனகராஜ் ஆகிய 2 பேர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது போலீஸ்காரர்களிடம் ஒருவர் கையில் ஆயுதங்களுடன் 3 பேர் சந்தேகப்படும்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை பார்த்தால் திருடர்கள்போல் தெரிகிறது என்று கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் சென்ற திசையை நோக்கி போலீஸ்காரர்கள் 2 பேர் சென்றனர். ஒரு இடத்தில் அந்த 3 பேரையும் போலீஸ் காரர்கள் சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீஸ்காரர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அவர்கள் 3 பேரும் கைகளில் பெரிய இரும்பு கம்பிகள், கத்திகள் போன்றவற்றை வைத்து இருந்தனர். அவற்றை கொண்டு போலீசாரை தாக்க முயன்றபோது போலீஸ்காரர்கள் அவர்களுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டார்கள். இதில் 2 போலீஸ்காரர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.












Click it and Unblock the Notifications