மீ்ண்டும் பாஜகவுக்கு திரும்பும் ஜஸ்வந்த் சிங்-உமா பாரதி
டெல்லி: ஜஸ்வந்த் சிங், உமா பாரதி ஆகிய மூத்த தலைவர்கள் மீ்ண்டும் பாஜகவுக்குத் திரும்புவர் என்று தெரிகிறது.
இருவரையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர மூத்த தலைவரான அத்வானி மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் பலனளிக்க ஆரம்பித்துள்ளன.
வரும் ஜூன் 12ம் தேதி பாட்னாவில் நடக்கும் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்துக்கு முன்பே உமாவும் சிங்கும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவர் என்று தெரிகிறது.
மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க கடந்த ஆண்டு சிம்லாவில் நடந்த பாஜக உயர் மட்டக் கூட்டத்தில் தான் ஜஸ்வந்த் சிங் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து அத்வானியை மிகக் கடுமையாக தாக்கிய ஜஸ்வந்த் சிங், கட்சியை தாக்கவில்லை. இதனால் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
இதை முதலில் கண்டுகொள்ளாத அத்வானி, சமீபகாலமாக ஜஸ்வந்த் சிங் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்ற ஒரு பிரிவினரின் கோரிக்கையை ஏற்றார்.
இதையடுத்து அவரை ஜஸ்வந்த் சிங்குடன் பேசினார். மேலும் சமீபத்தில் ராஜஸ்தானுக்கு சிறப்பு விமானத்தில் சென்ற அத்வானி, ஜஸ்வந்த் சிங்கையும் உடன் அழைத்துச் சென்றார்.
உமாவுக்கு எதிர்ப்பு தொடர்கிறது:
அதே நேரத்தில் உமா பாரதியை மீண்டும் பாஜகவுக்குள் கொண்டு வர அத்வானி முயன்றாலும் மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் செளஹானில் ஆரம்பித்து அங்குள்ள பல மூத்த தலைவர்களும் உமாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் எப்படியாவது பாஜகவுக்குள் மீண்டும் நுழைந்துவிட தீவிரம் காட்டி வரும் உமா பாரதி, தனது சொந்த கட்சியான பாரதீய ஜன் சக்தியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்புகளை அடக்கி தன்னை எப்படியாவது கட்சியில் சேர்ப்பார் அத்வானி என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் உமா.












Click it and Unblock the Notifications