ஜானகி அணியினர் புறக்கணிப்பு ஏன்?-ஜெவுக்கு முத்துசாமி 6 பக்க பரபரப்பு கடிதம்!

இன்று அதிமுக செயற் குழுக் கூட்டம் நடக்கும் நிலையில் ஜெயலலிதாவுக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார் முத்துசாமி.
முன்னாள் அமைச்சரான முத்துசாமியை ஜெயலலிதா நீண்ட காலமாகவே ஒதுக்கி வைத்துள்ளார். இதனால் அவர் அதிமுகவிலிந்து விலக முடிவு செய்துள்ளார்.
முத்துசாமிக்கு என்ன மனக்குறை?-ஜெ:
இது குறித்து நேற்று ஜெயலலிதாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, முத்துசாமிக்கு என்ன மனக்குறை இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் எதுவாக இருந்தாலும், முத்துசாமி என்னை சந்தித்துப் பேசலாம் என்றார்.
15 வருட அவமானம்-முத்துசாமி:
இந் நிலையில் சேலத்தில் இருந்து சென்னை வந்த முத்துசாமியை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவர் அளித்த பேட்டி:
கேள்வி: நீங்கள் திமுகவில் சேரப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளதே?
முத்துசாமி: அப்படி, பத்திரிகைகளில் தான் செய்தி வெளியாகியுள்ளது.
கேள்வி: ஜெயலலிதாவுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறதே?
முத்துசாமி: கடந்த 15 வருடங்களாக எனக்கும் கட்சிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அங்குள்ள சிலரால் பல அவமானங்களையும், மன உளைச்சல்களையும் இன்று வரை சந்தித்து வருகிறேன்.
கடந்த ஒரு வருடங்களாக நான் மட்டுமல்லாமல் என் ஆதரவாளர்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். எனது ஆதரவாளர்கள் நாம் ஏன் தொடர்ந்து அவமானப்பட வேண்டும்?, வேறு கட்சியில் சேர்ந்து கொள்ளலாமே என கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து நான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஜெ.வை சந்திக்க விரும்பவில்லை:
கேள்வி: ஒரு தொண்டரைக் கூட இழக்க விரும்பவில்லை என ஜெயலலிதா கூறியுள்ளாரே?
முத்துசாமி: பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளதாக கேள்விப்பட்டேன். எனது பிரச்சனையை அவரை நேரில் சந்தித்து ஒரு மணித் துளிகளில் பேச முடியாது. பல மணி நேரம் ஆகலாம். அவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க விரும்பவில்லை.
எனது வருத்தங்கள் பற்றி ஜெயலலிதாவுக்கு விரிவாக கடிதம் எழுத உள்ளேன். அவரது பதில் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன் என்றார்.
6 பக்க பரபரப்புக் கடிதம்:
இந் நிலையில் இன்று ஜெயலலிதாவுக்கு 6 பக்க கடிதத்தை அனுப்பியுள்ளார் முத்துசாமி. அதில்,
எம்.ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என கட்சியில் பிளவு ஏற்பட்டது. 1989ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்து மீண்டும் அண்ணா திமுகவாக உருவாகி இரட்டை இலையைப் பெற்றது.
அப்போது ஏற்பட்ட ஒப்பந்தம் ஆகியவை குறித்து விளக்கமாக குறிப்பிட்டுள்ள முத்துசாமி, அந்த ஒப்பந்தப்படி ஜெயலலிதா நடந்து கொள்ளாமல் பல ஆண்டுகளாக ஜானகி அணியிலிருந்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதை புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கட்சிக்கே தொடர்பில்லாத ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கம் காரணமாக எம்ஜிஆரின் பெயர், புகழ், திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும் அவரால் உருவாக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்ந்து அவமரியாதைக்கு உள்ளாகி வருவதாகவும், கட்சியில் உழைப்பவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து அதிமுகவில் தாம் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் முத்துசாமி தனது கடிதத்தில் கூறியுள்ளார் என்று தெரிகிறது.
செயற்குழு கூட்டம்-முத்துசாமி புறக்கணிப்பு:
இதற்கிடையே ஜெயலலிதா முன்னிலையில் இன்று நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தை முத்துசாமி புறக்கணித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications