சென்னை வருகிறார் ரோசய்யா - கருணாநிதியை சந்திக்கிறார்
சித்தூர்: ஆந்திர முதல்வர் ரோசய்யா இன்று சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார்.
இதுகுறித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சேஷாத்திரி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:
ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா ஒரு நாள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை சித்தூர் மாவட்டம் வருகிறார். இதற்காக காலை 7.40 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா செல்கிறார்.
பின்னர் திருமலை, திருப்பதி மற்றும் சித்தூர் அருகே உள்ள கலிகிரி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அந்த நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து, தனி ஹெலிகாப்டர் மூலம் மாலை 5.55 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பு முடிந்ததும் அன்று இரவே கார் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் திரும்பிச் செல்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பா அல்லது வேறு ஏதேனும் குறிப்பிட்ட விஷயத்துக்காக ரோசய்யா வருகிறாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications