மரண தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யும் கசாப்!
மும்பை தீவிரவாத வழக்கில் கடந்த மாதம் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், அதை எதிர்த்து அப்பீல் செய்யத் திட்டமிட்டுள்ளான் கசாப். இதற்காக வக்கீல் ஒருவரை தனக்கு அமர்த்தக் கோரி இலவச சட்ட மையத்திற்கு அவன் கடிதம் எழுதியுள்ளான்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் கசாப் அப்பீல் செய்ய சட்டத்தில் வழி உள்ளது. ஒரு வேளை அங்கு அவனது அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போகலாம். அங்கும் தள்ளுபடியானால் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு விண்ணப்பித்து விட்டு, அதன் மீதான முடிவு வரும் வரை காத்திருக்கலாம். சட்டத்தில் இப்படி பல வழி வகைகள் உள்ளன.
இது விஷயமாக, மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலை கண்காணிப்பாளரிடம் சட்ட உதவி கோரும் மனுவை அளித்துள்ளான் கசாப். அவர் அதை சட்ட உதவி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து விரைவில் வக்கீல் ஒருவரை சட்ட உதவி மையம் ஏற்பாடு செய்யும். அவர் கசாப் வழக்கை ஆராய்ந்து விட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்வார்.