அம்மிக் கல்லை வீசி தாய் கொலை- மன நலம் பாதிக்கப்பட்ட மகன் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தாயின் தலையில் அம்மி கல்லை போட்டு மகன் கொலை செய்தார். பின்னர் அவரே போலீஸ் நிலையத்தில் வந்து கொலை செய்த தகவலை கூறினார்.
நாகர்கோவில் வடசேரி காமராஜர் நகர் அம்மன் கோவி்ல் தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி அருள்தாஸ். இவரது மனைவி வில்லி மேரி. இவரது மகன் ராஜேஷ். வில்லி மேரி உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்துள்ளார். கூலி வேலைக்கு சென்று வந்த ராஜேசும் சமீப காலமாக எந்த வேலைக்கும் செல்லவில்லை.
அவருக்கு ஏற்கனவே இருந்த போதை பழக்கத்தின் காரணமாக அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்திருக்கிறார். வில்லி மேரியின் சகோதரி மற்றும் உறவினர்கள் சிறு, சிறு உதவிகளை செய்து வந்தனர். வழக்கம்போல் நேற்று இரவு வில்லி மேரியும், ராஜேசும் வீட்டில் படுத்திருந்தனர்.
இந்த நிலையில் திடீரென ராஜேஷ் இன்று காலை ரத்தக் கறையுடன் வடசேரி காவல் நிலையம் வந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இரு போலீஸ்காரர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
தனது தாயை அம்மி கல்லை தூக்கி போட்டு கொலை செய்து விட்டேன் என்று கூறி போலீஸ் நிலையத்துக்குள் அவராகவே அமர்ந்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்று காலை டிஎஸ்பி பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சோனமுத்து, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். வீ்ட்டை திறந்து பார்த்த போது தலை நசுங்கிய நிலையில் வில்லி மேரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் வந்தபிறகே அக்கம்பக்கத்தினருக்கு கொலை செய்யப்பட்ட தகவல் தெரிய வந்தது.
உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்