தமிழையும், திமுகவையும் காப்பதில் என்னைப் போன்ற இளைஞன் யாருமில்லை -கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 87 வயது முதியவன் என்று நீங்கள் என்னை அழைத்தாலும், தமிழையும், தன்மானத்தையும், திமுகவையும் காப்பதில் என்னைப் போன்ற இளைஞன் யாரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

முதல்வரின் 87வது பிறந்த நாளையொட்டி நேற்று இரவு சென்னை திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஏற்புரை ஆற்றினார் முதல்வர்.

அப்போது அவர் பேசியதாவது:

ஒரு இயக்கம் ஒரு வீடு குடும்பம் போல். பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்ட காரணத்தால், இடையிடையே சில சலசலப்புகள், கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட மாறுபாடுகள் கழகத்தை அழித்துவிடாமல் அந்த மாறுபாடு உண்டாக்குகிறவர்கள் திருந்தும் வகையில் கழகத்தின் வலிமை பயன்படுத்தப்பட்டு அதன் காரணமாக கூரேற்றப்பட்ட ஈட்டி முனையை போல் கனையின் முனைபோல் தி.மு.க. விளங்கி வருகிறது.

அதனால்தான், இடையிடையே யார் யாரோ எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் கூட இந்த இயக்கத்தை அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இந்த இயக்கம் இருக்கக் கூடாது என்று தந்திரோபாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்களை தாண்டி எப்படி இந்த இயக்கத்தை காப்பாற்றுவது, வீம்பு அல்லது தேவையற்ற வீரபிரதாபம் இவைகளால் இந்த இயக்கத்தை காத்து விடமுடியுமா என்ற கேள்விக்கு அண்ணா அளித்த பதில்-லட்சக்கணக்கான தம்பிமார்களை விழிப்படைய செய்து, ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு இந்த இயக்கத்தை பலி கொடுத்துவிடக்கூடாது என்று எண்ணிய காரணத்தால் இன்று தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், டெல்லியை ஆளும் கட்சிக்கு தோழமை கட்சியாக இருக்க முடிகிறது.

அப்படிப்பட்ட இயக்கத்தை நடத்திச்செல்லும் பெரும் பொறுப்பு தலைவர் என்னுடைய கரத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அகம்பாவத்தோடு கர்வத்தோடும், திமிரோடும் எண்ணிப் பார்த்து பெருமிதம் கொள்பவன் அல்ல நான். நீங்கள் எல்லாம் என் ஒருவனுடைய சக்தி, அறிவுக் கூர்மையால், சாதுரியத்தால் கிடைத்த வலிமை என்று எண்ணும் அளவுக்கு பைத்தியக்காரன் அல்ல. என்னுடைய வலிமை இந்த இயக்கத்தை நடத்தி செல்வதற்கு எனக்கு ஏற்பட்ட நெஞ்சுரம் எல்லாம் என் எதிரே வீற்றிருக்கும் லட்சோப லட்ச உடன்பிறப்புகளாகிய நீங்கள் வழங்கியது. நானாக உருவாக்கிக் கொண்டவை அல்ல.

அதனால்தான் துரைமுருகன் இங்கு கண்கள் கலங்கும் வகையில் செய்தி எடுத்துச் சொன்னபோது, அதைப்போல் கழகத்தினர் இந்த இயக்க வரலாறுகளை எடுத்துரைக்கும்போது, பேராசிரியர் தனிப்பட்ட முறையில் யார் யார் எப்படியெல்லாம் இந்த இயக்கத்தின் முதுகில் குத்தினர் என்று, எங்களுக்குள் புதைந்திருந்த ரகசியங்களை வெளியிட்டபோது எனது மனதுக்குள் சொல்லிக் கொண்டேன், இவ்வளவு சோதனைகளுக்கிடையிலேயும் நாம் இன்றைக்கு இந்த அளவுக்கு வலிமை பெற்று, மக்கள் செல்வாக்கு பெற்று விளங்க காரணம். நாம் கட்டிக் காத்து வரும் கடமை உணர்வு, கட்டுப்பாட்டு உணர்வு நாம் போற்றுகின்ற கண்ணியம் இதுதான். இதை நான் என்றும் மறப்பவன் அல்ல.

அண்ணா மறைவுக்குப்பிறகு திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் பேசுகையில், அண்ணா சொன்னார் என்று கருணாநிதியும் கட்சியில் உள்ளவர்களும் சொல்கிறார்கள். கருணாநிதிக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் சொல்வேன். கடமை, கண்ணியத்தை போற்றாமல் போனால் விட்டுவிடுங்கள். ஆனால் கட்டுப்பாட்டை மாத்திரம் துறந்து விடாதீர்கள் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். கட்டுப்பாடு இருந்தால் கண்ணியம் தவறி கூட நடக்கலாம். கடமையை கூட தவறிவிடலாம். கட்டுப்பாட்டோடு இருந்தால் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

பெரியார் அவ்வளவு நிர்தாட்சண்யமாக, சொன்ன அந்த வார்த்தையை இன்றளவும் கடைபிடிக்கும் காரணத்தால்தான் யாரும் ஆட்ட அசைக்க முடியாமல் ஆலமரம் போல் தி.மு.க. இன்றைக்கு இருக்கிறது. ஆலமரம் வளர்வதற்கு சிறிய விதைதான் காரணம். அந்த விதைதான் சுயமரியாதை, கட்டுப்பாடு, பெரியாரிசம், அண்ணாயிசம் என்றெல்லாம் நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் விதைதான், ஆலமரமாக நிழல் பரப்பி, மன்னனுக்கே கூட நிழல் தரும் மாண்பு படைத்ததாக தி.மு.க. விளங்குகிறது.

இந்த வலிமை நான் உருவாக்கினேனா? கிடையாது. இந்த வலிவுக்கும், பொலிவுக்கும் காரணம் நான் இவைகளை உருவாக்கவில்லை. என்னை உருவாக்கிய நீங்கள்தான் இதற்கு காரணம். அதனால்தான் வலிமை உருவாக்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். இந்த வாய்ப்பை, வலிவை, இந்த பொலிவை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம் என்றால், தி.மு.க.வை இந்த மாதத்தோடு ஒழித்துவிடலாம். அடுத்த மாதம் தி.மு.க. இருக்காது என்றெல்லாம் ஆரூடம் கூறுவோர், பத்திரிகை பலத்தாலேயே திண்ணை பிரசாரத்தாலேயே ஒருவருக்கு ஒருவர் மூட்டிவிடும் கலகத்தாலேயே இந்த இயக்கத்தை ஒழித்துவிடலாம் என்று யாராவது கருதுவாரேயானால் அவர்களுக்கு நான் அளிக்கும் பதில், எத்தனையோ பேர் முட்டி முட்டி முயன்று பார்த்து தலையில் ரத்தம் வழிந்ததே தவிர, இந்த பாறையை எவரும் உடைக்க முடியவில்லை என்பதெல்லாம் நான் தருகின்ற பதிலாக அமைந்திருக்கிறது.

நான் இப்படி பேசுவதற்கு காரணம் உங்களையெல்லாம் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட கர்வமா அல்ல. தம்பி ஸ்டாலின் சொன்னதைப் போல் 11 இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்ற அகம்பாவமா இல்லை. எத்தனை தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் என்று பேசுகின்ற வீரபிரதாபத்துக்கு காரணம் என்ன? நான் அல்ல. என் நாடி நரம்புகளில் ரத்த ஓட்டமாக ரத்த துளிகளாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற லட்சோப லட்ச தி.மு.க. உடன்பிறப்புகள் தாம் இந்த உணர்வுக்கு, பெருமிதத்துக்கு காரணம் என்பதை நான் மறந்துவிடவில்லை. மறந்தால் பிறகு கருணாநிதியே இல்லை. பிறகு கழகமே இல்லை. அதை மறந்த எவனாலும், நம்மால்தான் எல்லாம் என்று நினைக்கின்ற யாராலும் இந்த கழகத்தை காப்பாற்ற முடியாது.

எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இதை தோற்றுவித்து, நம் கையில் அண்ணா ஒப்படைத்தார். அண்ணா மறைந்தபோது நான் சொன்ன ஒரு உதாரணம். வீட்டிலேயே பெரியவர்கள் இல்லாத காலத்தில், அம்மா மறைந்துவிட்ட நேரத்தில் அகல்விளக்கு எடுத்துப் போய் அணைந்து விடாமல் இரு கைகளால் பொத்திக் கொண்டு செல்லும் சிறுமியை போல் நான் தி.மு.க. என்ற அகல்விளக்கை என் கையால் பொத்தி காற்றில் அணையாமல், கீழே விழுந்துவிடாமல் காப்பாற்றிக் கொண்டு அந்த ஒளியை என் வீட்டுக்கு வழங்குவதை போல் நாட்டுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறேன். அந்த சிறு குழந்தைக்கு, சிறுமிக்கு, தெருவில் உள்ள அனைவரும் தரும் ஆதரவு போல் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அந்த பேச்சு வீண் போகவில்லை என்பதை போலத்தான் எனக்கு தொடர்ந்து வெற்றி தந்து கொண்டிருக்கிறீர்கள்.

எங்களுக்கு நீங்கள் தரும் வெற்றி மேலும் மேலும் உற்சாகம் தருகிறதேயன்றி எங்களை உசுப்பிவிடவில்லை. எங்களுக்கு மமதையை ஏற்படுத்தவில்லை. திமிர்வாதத்துக்கு இடம்தரவில்லை. நாங்கள் என்றும் உங்களுடையவர்கள். உங்களில் சிலர்தான் நாங்கள். மேடையில் அமர்ந்திருப்பதாலேயே நாங்கள் தலைவர்கள் நீங்கள் தொண்டர்கள் என்று அர்த்தம் அல்ல. நீங்கள் இங்கே வருவதற்கு நீண்ட நேரம் ஆகாது. நிச்சயமாக வரமுடியும். நீங்கள் வரக்கூடியவர்கள் என்ற எதிர்பார்ப்போடுதான் உங்களை அணுகுகிறோம்.

நாங்கள் உங்களைவிட பெரியவர்கள் அல்ல. 87 வயது என்ற காரணத்தால் முதியவன், பெரியவன் என்று என்னை அழைக்கலாம். ஆனால், தமிழை, தன்மானத்தை, தி.மு.க.வை காப்பதில் என்னை போல் இளைஞன் இருக்க முடியாது. அந்த உறுதியை நிறைவேற்றுவேன். இந்த இனிய விழாவில் புதிய வரவாக நமது இயக்கத்துக்கு வந்திருக்கும் குஷ்புவை உங்கள் ஆதரவோடு வரவேற்கிறேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+