திமுக அரசைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை - முத்துச்சாமி
சென்னை: திமுக அரசைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று கூறியுள்ளார் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு திமுகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் சு.முத்துச்சாமி.
சில நாட்களுக்கு முன்பு திமுகவில் சேர திட்டமிட்டார் முத்துச்சாமி. இதையடுத்து அவர் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதையடுத்து நேற்று தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். உறுப்பினர் படிவத்திலும் கையெழுத்திட்டார்.
அவருடன் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள் பவானிசாகர் வி.கே.சின்னசாமி, ஈரோடு மாணிக்கம், அந்தியூர் வி.பி.மாதையன், மாநில வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கே.ஆறுமுகம், ஈரோடு மாநகர செயலாளர் மார்க்கெட் ராஜா மற்றும் சென்னையைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் தி.நகர் பொன்னுரங்கம், வடசென்னை மாவட்ட துணை செயலாளர் ஜெ.குமார், தென்சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் புல்லட் கணேசன், ஜெ.பேரவை முன்னாள் இணை செயலாளர் அண்ணாநகர் என்.எஸ்.டி.கருணாகரன், 110-வது வட்ட மேலமைப்பு பிரதிநிதி பி.நாகதேவன், மாநகர் போக்குவரத்துக்கழக மத்திய சங்க துணைத்தலைவர் எம்.ஆதிகேசவன், அனைத்து போக்குவரத்து கழக மேற்பார்வையாளர் சங்க மாநிலத் தலைவர் வி.அசோகன், மத்திய சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் செயலாளர் டி.அமரன், பொழிச்சலூர் பம்மல் ராஜகோபால் ஆகியோரும் திமுகவில் இணைந்து கொண்டனர்.
திமுகவில் இணைந்தது குறித்து பின்னர் முத்துச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஏற்கனவேநாஅறிவித்தபடி இன்று தி.மு.க.வில் இணைந்துள்ளோம். ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணையும் விழாவை எப்போது நடத்துவது, எப்படி நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது பற்றி முதல்வருடன் பேசி இப்போது தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் 12-ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 3 மணி அளவில் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான எங்களுடைய சகோதரர்கள் அன்று தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொள்ள இருக்கிறார்கள் என்றார்.
உங்களுடன் முக்கிய தலைவர்கள் வேறு யாரும் வருகிறார்களா என்ற கேள்விக்கு, நாங்கள் இணைகிற போது நீங்கள் எல்லாம் வரவேண்டும் என்று யாரையும் நாங்கள் அழைக்கவும் இல்லை, வற்புறுத்தவும் இல்லை. பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களின் முடிவுக்கே விட்டுவிட்டோம் என்றார்.
தி.மு.க.வில் உங்களுக்கு மரியாதை எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, அன்பாக வரவேற்றனர். இங்கு மரியாதை மிக அதிகமாக நிச்சயம் கிடைக்கும். மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருக்கிறது என்றார்.
திமுக ஆட்சி குறித்து கேட்டபோது, திமுக ஆட்சியைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்றார் முத்துச்சாமி.
ஏதாவது பதவி, பொறுப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு, நாங்கள் அதைப் பற்றி நினைக்கவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications