ஈழத் தமிழர் பிரச்சனை: ராஜபக்சேவை வலியுறுத்தியுள்ளோம்-கருணாநிதிக்கு பிரதமர் பதில்
சென்னை: இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் கருணாநிதி சில தினங்களுக்கு முன் எழுதிய கடிதத்துக்கு, பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க இலங்கை அதிபர் ராஜபச்சேவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், "இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாக, டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டது.
அதற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் முகாம்களில் உள்ள 47 ஆயிரம் தமிழர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று ராஜபக்சே உறுதி அளித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய - இலங்கை அரசுகள் கூட்டுத் திட்டத்தின்கீழ் 50 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்திய அரசு தனிப்பட முறையில், இடம் பெயர்ந்த தமிழர் குடும்பங்களை மறுகுடியமர்த்தி, அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ராஜபக்சேவிடம் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கவும், அங்கு வாழும் அனைத்து சிறுபான்மையினரும், குறிப்பாக தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும், வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது", என்று குறிப்பிட்டுள்ளார்.