கங்கை ஆற்றில் படகு மூழ்கி 60 பேர் பலி!
பாலியா: கங்கை ஆற்றில் படகு மூழ்கியதில் இன்று 60 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் ஹல்டி எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது குல தெய்வமான முண்டன் சாமிக்கு அபிஷேகம், பூஜைகள் நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான முண்டன் திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.
ஹல்டி பகுதியில் உள்ள ஓஜ்வாலியா காட் என்ற இடத்திலிருந்து பக்தர்கள் கங்கை ஆற்றின் மறுகரையில் உள்ள முண்டன் கோவிலுக்கு படகுகளில் சென்றனர். இதில் ஒரு படகில் சுமார் 60 பேர் ஏற்றப்பட்டிருந்தனர்.
அந்த பகுதி கங்கை ஆற்றின் நடுப்பகுதிக்கு வந்தபோது போது சுழலில் சிக்கிக் கொண்டது. இதில் நிலை தடுமாறி அந்த படகு கவிழ்ந்தது.
படகில் இருந்த 60 பேரும் கங்கை ஆற்றின் அதிவேக சுழலுக்குள் சிக்கி மூழ்கினார்கள். அதிகாலை நேரம் என்பதால் 60 பயணிகளும் தத்தளித்தனர். யாராலும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த கோர விபத்தில் படகில் இருந்த 60 பேரும் நீரில் மூழ்கி பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. படகு கவிழ்ந்த தகவல் அறிந்ததும் சுற்றுப் பகுதி கிராமத்தினர் அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காலை 10 மணி வரை 10 உடல்கள் மீட்கப்பட்டதாக மாவட்ட மாஜிஸ்திரேட் செந்தில் பாண்டியன் கூறினார். தொடர்ந்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
கோவில் திருவிழாவிற்காக 30 பேர் செல்லக்கூடிய படகில் 60 பேர் சென்றுள்ளனர். இதனால் எடை தாங்க முடியாமல் படகு கவிழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications