For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வக்கீல்கள் தமிழில் வாதாட நடவடிக்கை-ஜெ

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: எடுத்தற்கெல்லாம் டெல்லிக்குப் போகிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் வக்கீல்களின் குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட நிறைவேற்ற அவருக்கு மனதில்லை என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி கோரி வக்கீல்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மதுரையில் 6 வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 9.6.2010 முதல் சில வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வளாகத்தினுள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை நேரில் சந்தித்து உயிரை மாய்த்துக் கொள்கிற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வேறு ஏதாவது வழியில் போராட்டத்தை நடத்துங்கள் என்றும் ஒரு நீதிபதி ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு 32 கோடி ரூபாயை ஒப்பளிப்பு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ஆனால் திமுக அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் பெறப்படவில்லை என்றும் மற்றுமொரு தகவல் வருகிறது.

தமிழில் வாதாடுவது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று கூட வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

ஆனால் எடுத்தற்கெல்லாம் டெல்லிக்கு ஓடும் முதல்வர் கருணாநிதிக்கு, வக்கீல்களின் இந்த சாதாரண கோரிக்கையை கூட நிறைவேற்ற மனமில்லை.

மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் வாதாட வழி வகுத்தவர் எம்.ஜி.ஆர். என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்டுவதோடு, வழிக்கறிஞர்களின் இந்தக் கோரிக்கைக்கு அ.தி.மு.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராடும் வழக்கறிஞர்களை, அ.தி.மு.க. சார்பில், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், மாணவர் அணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார், வழக்கறிஞர் பிரிவு இணைசெயலாளர்கள் பி.ஜோதி, எம்.கோவிந்தன், துணை செயலாளர் டி.மோகன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன் ஆகியோர் நேரில் சந்திப்பார்கள்.

2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நிர்வாகிகள் குடும்பத்துடன் சந்திப்பு

இதற்கிடையே, அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில்,

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் சந்தித்த மதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன்-வனிதா தம்பதியினரின் பெண் குழந்தைக்கு மீனாட்சி என்றும்; கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் சி.பெருமாள்-வள்ளி தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு பிரதாப் என்றும்; கோவை மாநகர் மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ஆர்.கணேஷ்-அகிலாதேவி தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு பிரதீப் என்றும் பெயர் சூட்டி ஆசி வழங்கினார்.

இந்த நிகழ்வுகளின் போது, அவரவர் குடும்பத்தினரும் உடன் இருந்தனர். பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகர ஜெயலலிதா பேரவை முன்னாள் துணைச் செயலாளர் எஸ்.பொன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

சேலம் புறநகர் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ஆகாலூர் கிளைக் கழக முன்னாள் செயலாளர் டி.பாலுசாமி குடும்பத்துடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X