செம்மொழி மாநாடு-இரவு 10 மணி வரை மதுக் கடைகளுக்கு அனுமதி
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி மாநாடு நடைபெறும் நாட்களில், டாஸ்மாக் மதுக் கடைகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் கோவை மதுக்கடைகளுக்கு ஒரு சுற்றறிக்கை விட்டுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்:
- ஒவ்வொரு மதுபான கடையின் மேற்பார்வையாளரும் தமது கடையில் எவ்வளவு மதுபான பெட்டிகள் வைக்கலாம் என்ற கொள்ளளவு அறிக்கையினை 3-6-2010 தேதிக்குள் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக மதுக்கூடம் (பார்) இல்லாத மதுக்கடைகளின் மேற்பார்வையாளர்கள் கடையில் தேவையான அளவு சரக்கிருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அனைத்து அரசு மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்களும் தமது கடைக்கு தேவையான சரக்குகளை தேவைப்பட்டியல் கொடுத்து 20-6-2010-க்குள் கடையில் இருப்பு வைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- நுகர்வோர் பார்வையில் படும்படி அனைத்து வகையான மதுபானம் மற்றும் பீர் வகைகள் அடுக்கி வைத்தும், மதுபாட்டில்களை தூசியில்லாமல் சுத்தமாகவும் வைத்திருக்க உத்தரவிடப்படுகிறது. குளிர்பதன பெட்டி நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபானக் கடைகளின் பணியாளர்கள் அனைவரும் 20-6-2010 முதல் 28-6-2010 வரை விடுப்பு ஏதும் எடுக்காமல் தவறாது கடைப்பணியில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- மதுபான கடையுடன் இணைந்த மதுக்கூடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். மதுக்கூட திண்பண்டங்களின் விலைப்பட்டியலை மதுக்கூடத்தில் வைக்கப்பட வேண்டும். மேலும், திண்பண்டங்களை மூடி சுகாதாரமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
- மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட கடை மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டால் மின் வாரியத்திற்கு தொடர்பு கொண்டு மின் இணைப்பு பெற உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- விற்பனை தொகையை பாதுகாப்பு கருதி கடையில் வைக்க இயலவில்லை எனில், மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு மேற்பார்வையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கடையில் சேகரமாகும் காலி அட்டைப் பெட்டிகளை ஒப்பந்ததாரர் வசம் உடனுக்குடன் ஒப்படைத்து கடையில் அதிகமாக சரக்கு வைக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.