அமெரிக்காவின் சிபிஎஸ்ஸுடன் இணைந்து டிவி துறையில் நுழைகிறார் அனில் அம்பானி
மும்பை : அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து டிவி ஒளிபரப்புத் துறையில் கால் பதிக்கிறார் அனில் அம்பானி.
முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோருக்கு இடையே ஏற்படுத்தப்பட்டிருந்த குடும்ப ஒப்பந்தம் சமீபத்தில் காலி செய்யப்பட்டது. இதையடுத்து இரு தரப்பும் தத்தமது விருப்பத் துறைகளில் கால் பதிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து முகேஷ் அம்பானி மீண்டும் செல்போன் துறையில் மிக பிரமாண்டமான ரீஎன்ட்ரியை கொடுக்கவுள்ளார். மேலும் பிராட்பேண்ட் பிரிவிலும் அவர் பெரும் திட்டங்களை மேற்கொள்ளப் போகிறார்.
இந்த நிலையில் அனில் அம்பானியும் டிவி துறையில் கால் பதிக்கவுள்ளார். ஏற்கனவே அனில் அம்பானி, ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் திரைப்படத் துறையில் கொடி கட்டிப் பறந்து வருகிறார். தற்போது டிவியிலும் அவர் கால் பதிக்கிறார்.
அதன்படி அமெரிக்காவின் சிபிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நெட்வொர்க் என்ற நிறுவனம் டிவி ஒளிபரப்பில் இறங்குகிறது. இது ஒரு கூட்டுத் தயாரிப்பாகும். இதில் ரிலையன்ஸ் மற்றும் சிபிஎஸ் ஆகியவற்றுக்கு 50-50 பங்குகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.