2 வக்கீல்களின் உண்ணாவிரதம் வாபஸ்-மற்றவர்கள் தொடருகிறார்கள்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 7 சென்னை வக்கீல்களில் 2 பெண் வக்கீல்கள் மட்டும் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மற்றவர்கள் தொடருகிறார்கள்.
தமிழை வழக்காடு மொழியாக்க கோரி மதுரை உயர்நீதிம்ன்றத்தின் 6 வக்கீல்கள் உண்ணாவிரதம் தொடங்கினர். இது தமிழகம் முழுவதும் பரவியது.
அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் கடந்த 17-ம் தேதி முதல் சில வக்கீல்கள் உண்ணாவிரதம் தொடங்கினர்.
இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். மதுரையிலும், சென்னையிலும் உண்ணாவிரதம் இருந்த வக்கீல்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 11 பேரில் 3 பேர் பெண்கள். இதில் அங்கையர்கண்ணி, சக்திராணி ஆகியோர் நேற்று சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்..
இதே போல் பார்த்தசாரதி, ராஜி, பன்னீர்செல்வம், செய்யாளன், முனீஸ்வரன் ஆகிய வக்கீல்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அங்கையர்கண்ணியும், சக்திராணியும் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் மற்ற 5 வக்கீல்களும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
இதே போல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உண்ணாவிரதம் இருந்து கைதாகிய பகத்சிங், ராஜேந்திரன், ராஜா, நடராஜன், பாரதி ஆகிய 5 வக்கீல்களும் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள்.