குழந்தைகள் கடத்தல்-மேலும் 4 பெண்கள் கைது-2 குழந்தைகள் மீட்பு
சென்னை: குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட வழக்கில் மேலும் 4 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.அவர்கள் மூலம் மேலும் 2 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்பட்ட விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த லலிதா உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் பெண்களாவர்.
இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 9 குழந்தைகள் குறித்த தகவல் கிடைத்து அவர்களை போலீஸார் மீட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது மேலும் நான்கு பெண்கள் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு சிக்கியுள்ளனர்.
அவர்களது பெயர்கள் - சென்னை பாலவாக்கம் நான்சி, ஆஷா, அவரது அக்கா கவிதா, உறவினர் ஆண்டாள் ஆகியோர்.
இதில் நான்சி, கையில் கைக்குழந்தையுடன் மாதவரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்வைத்திருந்த குழந்தை புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆரிமத்திலிருந்து விலை கொடுத்து வாங்கி வரப்பட்டது என்பது தெரிய வந்தது.
அந்தக் குழந்தைக்கு வயது 8 மாதமாகும். இக்குழந்தையை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ. 1 லட்சத்திற்கு விற்பதற்காக நான்சி கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதில் நான்சிக்கு ஆண்டாள், ஆஷா, கவிதா ஆகியோர் உதவியுள்ளது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக நான்சி கொடுத்த வாக்குமூலம்...
எனது கணவர் பெயர் கிறிஸ்டோபர். கல்யாணம் ஆன ஒரே மாதத்தில் அவர் இறந்து விட்டார். இதனால் தனிமையில் வாடினேன். அப்போது ஜெயபிரசாத் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. ஜெயபிரசாத்தின் மனைவிதான் ஆஷா. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் புதுச்சேரியிலிருந்து 7 மாதங்களுக்கு முன்பு ஒரு கைக்குழந்தையை வாங்கி வந்தனர். ஆனால் அதை வளர்க்க முடியவில்லை என்று கூறி விற்க முடிவு செய்தனர்.
இதையடுத்து ஆஷாவின் அக்கா கவிதா மற்றும் உறவினர்ஆண்டாளிடம் குழந்தையைக் கொடுத்தார் ஜெயபிரசாத். அவர்கள், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ. 1 லட்சத்திற்கு விற்க பேசி வைத்தனர். அதற்காக குழந்தையை எடுத்து வந்தபோதுதான் நான் பிடிபட்டேன் என்று கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி குழந்தை கடத்தல்-2 பேர் கைது
இதற்கிடையே, கிருஷ்ணகிரியில் குழந்தைகள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஜெயப்பிரசாத் என்பவர், சென்னையில் கைதான ஆஷாவின் கணவர் ஆவார். இன்னொருவரின் பெயர் ராமலிங்கம், கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 2009-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி ரிசார்-மும்தாஜ் தம்பதியருக்கு பிறந்த 4 நாள் ஆண் குழந்தையை கடத்தி பெங்களூர் ஜெய்நகரைச் சேர்ந்த குளுதியராஜ்-மேகலா தம்பதியருக்கு விற்றதும், 2008-ம் ஆண்டு பேரம்பட்டு காலனியைச் சேர்ந்த செல்வம்-சங்கீதா தம்பதியரின் இரண்டரை வயது பாலாஜி எனும் குழந்தையை கடத்தி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பெரியசாமி-கமலம் தம்பதியருக்கு விற்றதும் தெரிய வந்தது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலிருந்து 2 ஆண் குழந்தைகளை கிருஷ்ணகிரியை சேர்ந்த தனலட்சுமியும், அவரது கள்ளக் காதலர் ராமலிங்கமும் கடத்தி வந்தனர்.
அக்குழந்தைகளில் ஒருவனுக்கு வயது 3, பெயர் பாலாஜி.இன்னொரு குழந்தை நிசார் என்பவரின் குழந்தையாகும். பிறந்த நான்கு நாட்களில் இக்குழந்தையைக் கடத்தியுள்ளனர்.
2 குழந்தைகளையும் அவர்கள் சென்னைக்கு கொண்டு சென்று கிரிஜா (ஏற்கனவே இவர் கைதாகி விட்டார்) மூலம் கைக்குழந்தையை குளுதியராஜ்-மேகலா தம்பதியினருக்கு ரூ.55 ஆயிரத்திற்கு விற்றனர்.
பாலாஜியை கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியை சேர்ந்த செல்வி என்பவரிடம் ரூ.3 ஆயிரத்திற்கும் விற்றுள்ளனர். இவர்கள் மூலம் இந்த குழந்தை, பெரியசாமி-கமலம் தம்பதியினருக்கு கிடைத்தது.
போலீஸ் காவலின் போது தனலட்சுமி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் 2 குழந்தைகளையும் மீட்க சென்றனர். போலீசார் சென்றதும் அதிர்ச்சியடைந்த வளர்ப்பு பெற்றோர் குழந்தையை கட்டிப் பிடித்து அழ தொடங்கினார்கள்.
அவர்களை கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையத்திற்குப் போலீஸார் அழைத்து வந்தனர். குழந்தையைப் பார்த்த உண்மையான பெற்றோர் ஓடி வந்து கட்டி அணைத்து பாசத்துடன் முத்தமிட்டனர். ஆனால் அந்தக் குழந்தைக்கு சொந்தப் பெற்றோரை அடையாளம் தெரியாததால் அலறி அழுதது. இதனால் அங்கு பெரும் குழப்பம் நிலவியது. கண்ணீரும், கம்பலையுமாக மாறியது காவல் நிலையம்.
அப்போது வளர்ப்பு பெற்றோர், குழந்தைகளை மிகவும் பாசமாக வளர்த்து வருவதால் எங்களால் அவர்களை பிரிய முடியாது என குழந்தைகளை கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டனர். இதையடுத்து அக்குழந்தைகளின் உண்மையான பெற்றோர், கதறி அழுதனர். இதைப் பார்த்த வளர்ப்புப் பெற்றோர், நிஜமான பெற்றோரின் கால்களில் விழுந்து கெஞ்சி அழுதனர்.
இப்படி இரு பெற்றோர்களும் கண்ணீரும், கதறி அழுவதும், காலில் விழுவதுமாக இருந்த நிலையில், சம்பந்தப்பட்ட குழந்தைகள் காவல் நிலையத்தில் ஒன்றும் தெரியாமல் அங்குமிங்கும் ஓடி விளையாடியதால் காவல் நிலையத்தில் இருந்த அனைவருமே கலங்கிப் போயினர்.
இரு குழந்தைகளையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நிஜமான பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மும்பைக்குக் கடத்தப்படவிருந்த சிறார்கள் மீட்பு
இதற்கிடையே, தேனியிலிருந்து மும்பைக்கு 3 சிறுவர்களை கடத்த முயன்றவர்களை போலீஸார் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைத்துப் பிடித்தனர்.
தேனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் முத்துராஜ் (17). இவரை 3 நாட்களாக காணவில்லை. இதையடுத்து ராஜேந்திரன் தேனி எஸ்.பியை சந்தித்துப் புகார் கொடுத்தார்.
போலீஸ் விசாரணையில் முத்துராஜ் மற்றும் சிலரை ஒரு கும்பல் ரயில் மூலம் மும்பைக்கு கடத்த முயன்ற தகவல் தெரிய வந்தது.இதையடுத்து திண்டுக்கல் ரயில் நிலையத்திற்குப் போலீஸ் படை விரைந்தது.
அங்கு மும்பை செல்லும் ரயிலில் முத்துராஜ், பால் பாண்டி (17), கணேசன் (18ஃ) ஆகியோர் இருப்பது தெரிய வந்தது.
3 பேரையும் மும்பையில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு வேலைக்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சிறுவர்களைக் கடத்த முயன்றதாக செல்வம் என்பவரைக் கைது செய்தனர். 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.