இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் பேச்சு
இஸ்லாமாபாத்: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் சல்மான் பஷீர் ஆகியோர் இஸ்லாமாபாதில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
2008ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திய. இந் நிலையில் மும்பை தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள் மீது அமெரிக்க நெருக்குதலால் பாகி்ஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய பின்னர் கடந்த கடந்த மார்ச்சில் மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்கியது.
இதுவரை இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்கள் மட்டத்தி்ல் இரு முறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இப்போது 3வது முறையாக நிருபமா ராவ், சல்மான் பஷீர் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.
அப்போது தீவிரவாதம், காஷ்மீர் விவகாரம், ஆப்கானிஸ்தான் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய அமைப்புகளை ஒடுக்குவது தொடர்பாகவும் இருவரும் பேசினர்.
2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானுக்குச் செல்லும் முதல் மூத்த இந்திய அதிகாரி நிருபமா ராவ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூலை 15ம் தேதி இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசவுள்ள நிலையில் இன்றைய சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியையும், நிருபமா ராவ் சந்தித்துப் பேசவுள்ளார்.
ப.சிதம்பரமும் பாக். பயணம்:
இந் நிலையில் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஜூன் 25ம் தேதி இஸ்லாமாபாத் செல்கிறார். அப்போது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கை, சிதம்பரம் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
பாக். சிறைகளில் உள்ள 17 இந்தியர்கள் விடுதலை:
இந் நிலையில் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 17 இந்தியர்களை அந்நாட்டு அரசு விடுவிக்க முடிவு செய்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்துள்ளது.
கைதிகள் வாகா எல்லைப் பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.