பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மமதா எதிர்ப்பு-ஆனால் காங்.குடன் சண்டை போட மாட்டாராம்!
டெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர், கெரசின் விலை உயர்வுக்கு திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேசமயம், தனது கட்சி சிறிய கட்சி என்பதாலும், காங்கிரஸ் கட்சிதான் பெரிய கட்சி என்பதாலும், இதற்கு மேல் காங்கிரஸுடன் தாங்கள் சண்டை போட மாட்டோம், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெற மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல், காஸ், கெரசின் விலை உயர்வு குறித்து மமதா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், இந்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. வருத்தப்படுகிறேன். திரினமூல் காங்கிரஸ் கட்சி இந்தமுடிவை ஏற்காது. இந்த முடிவை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
விலை உயர்வானது சாதாரண மக்களின் சமையலறை செலவில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான அமைச்சர்கள் குழுக் கூட்டத்திற்கு எங்களது கட்சி போகவில்லை. இதை நாங்கள் ஆதரிக்கவில்லை.
அதற்காக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களது ஆதரவு அரசுக்கு மிகவும் அவசியம். அது தொடரும்.
எங்கள் கட்சிக்கு 19 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், மத்திய அரசுக்கோ 271 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. நாங்கள் பெரிய கட்சி இல்லை. எனவே, எங்களுடைய எதிர்ப்பு குரலை மட்டுமே எழுப்ப முடியும். காங்கிரஸ் பெரிய கட்சி என்பதால், அந்த கட்சி தான் முடிவை எடுக்க முடியும். இந்த பிரச்சினைக்காக சண்டை போட நான் விரும்பவில்லை என்றார் மமதா.












Click it and Unblock the Notifications