30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல்
கோவை: தமிழ்மொழி, முப்பது உலக மொழிகளுக்குத் தாய் மொழியாக விளங்குகின்றது என்று தமிழறிஞர் ஜான் சாமுவேல் தெரிவித்தார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்காம் நாளான சனிக்கிழமை அன்று முனைவர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் செம்மொழித் தகுதி கருத்தரங்கு நடந்தது.
இந்த கருத்தரங்கில் பங்கேற்ற தமிழறிஞர் முனைவர் ஜான் சாமுவேல் பேசுகையில்,
தமிழ் மொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளுக்குத் தாயாக விளங்குகிறது. இந்த உண்மை 18 ம் நூற்றாண்டு வரை யாருக்கும் தெரியவில்லை.
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியதாக அனைவரும் கருதிக் கொண்டிருந்தனர்.
ஆனால், முதன்முதலில் எஃப்.டபிள்யூ. எலியட்ஸ் என்ற வெளிநாட்டு அறிஞர்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு இடையே உள்ள தொடர்பை ஆய்ந்தறிந்து கூறினார்.
பின்பு, அறிஞர் கால்டுவெல் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தமிழ் 9 மொழிகளுக்குத் தாய் என்று தெரிவித்தார். இதில் திருந்திய மொழிகள் 5 என்றும், திருந்தா மொழிகள் 4 என்றும் அவர் தெளிவுபட கூறினார்.
இதனையடுத்து, கடந்த 1906 ம் ஆண்டில் இந்திய மொழியியல் ஆராய்ச்சி நிறுவனம் கள ஆய்வு செய்த போது தான் தமிழ் மொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த 30 மொழிகளுக்குத் தாய்மொழி என்று உறுதிபட தெரிவித்துள்ளது.
ஆசிய மொழிகளான ஜப்பானிய மொழி, கொரியன் மற்றும் மத்திய ஐரோப்பிய மொழியான ஹங்கேரியன் ஆகியவற்றுடன் தமிழுக்கு உள்ள தொடர்பு தற்போது அறிஞர்கள் நடத்தும் ஆய்வுகளில் இருந்து தெளிவாகின்றது.
ஜப்பானிய மொழியியல் அறிஞரான சுமோ ஜப்பானிய மொழி தமிழ் மொழியில் இருந்து தோன்றியதாகக் கூறுகிறார். இவ்வாறு பன்மொழிகளை ஈன்றதில் தமிழ் செம்மொழியாக விளங்குகிறது என்றார்.