இந்த பந்த் தொடக்கம்தான், எங்களது போராட்டம் தொடரும்-தா.பாண்டியன்
சென்னை: மத்திய அரசின், மக்கள் விரோத விலை உயர்வு கொள்கைக்கு எதிராக நடைபெற்ற இந்த பந்த் போராட்டம் ஒரு தொடக்கமேயாகும். வரும் நாட்களில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான கூட்டுப் போராட்டங்கள் தொடரும் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில், கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இந்த பாரத் பந்திற்கு ஆதரவளிக்கும் வகையில் முழுமையாக இயங்காதிருந்தன.
இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் குறைவான மக்களே பயணம் செய்தனர். தமிழகம் முழுமையும் கைத்தறி, விசைத்தறி, பாத்திரம் தயாரிப்பு, அப்பளம் தயாரிப்பு போன்ற சிறு தொழில்களில் ஈடுபட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள், உரிமையாளர்கள் முழுமையாக பணிகளை நிறுத்தினர். பின்னலாடை என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில்களில் பணிபுரியும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.
பல்வேறு ஆலைகளிலே பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பணிகளை புறக்கணித்துள்ளனர். மாநிலத்தின் சில பகுதிகளில் விவசாய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் பணிகளை புறக்கணித்தனர்.
மத்திய அரசின், மக்கள் விரோத விலை உயர்வு கொள்கைக்கு எதிராக நடைபெற்ற இந்த பந்த் போராட்டம் ஒரு தொடக்கமேயாகும். வரும் நாட்களில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான கூட்டுப் போராட்டங்கள் தொடரும்.
தமிழகத்தில், பந்த் போராட்டம் பெரும் வெற்றிபெற காரணமாக செயலாற்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அ.தி.மு.க, ம.தி.மு.க, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பார்வர்டு பிளாக் தொண்டர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பந்த போராட்ட தினத்தன்று கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பகுதியினரின் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையிலடைக்க முயற்சிப்பதையும் எதிர்கட்சி தொண்டர்கள் மீது ஆயுதம் கொண்டு நடத்திய தாக்குதல்களையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.