கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார் ஜெ.-தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை திரும்பினார். கொடநாட்டிலிருந்து சென்னைக்குத் திரும்பிய தங்களது தலைவியை அக்கட்சியின் தொண்டர்கள் தடபுடலாக வரவேற்றனர்.
கடந்த மாதம் 11ம் தேதி அவர் தோழி சசிகலாவுடன் சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை சென்றார். அங்கிருந்து கார் மூலம் நீலகிரி மாவட்டம் கொடநாடு சென்றார். அங்குள்ள தனது எஸ்டேட்டில் கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதமாக தங்கியிருந்தார்.
இந் நிலையில் அங்கு அவர் விதிகளை மீறி மாபெரும் டீ எஸ்டேட் கட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அது குறித்து விசாரிக்க அதிகாரியை நியமித்தது தமிழக அரசு.
இந்த விசாரணை தொடங்கவுள்ள நிலையில் ஜெயலலிதா இன்று கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பினார். கொடநாட்டிலிருந்து காரில் புறப்பட்டு கோவை சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வரவேற்புக்குப் பின்னர் ஜெயலலிதா தனது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
கோவையில் 13ம் தேதி ஜெ ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, போலி மருந்து-காலாவதியான மருந்து, நூல்விலை உயர்வு, உர மானியம் குறைப்பு, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஜெயலலிதா தலைமையில் வரும 13ம் தேதி கோவை வ.உ.சி. மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் பங்கேற்க கோவை செல்லும் ஜெயலலிதா, அங்கிருந்து அப்படியே மீண்டும் கொடநாடு செல்வாரா அல்லது சென்னைக்கு திரும்புவாரா என்று தெரியவில்லை.