குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளத்தில் சிக்கிய பயணிகள்!
குற்றாலம்: தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் குற்றாலம், ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான புனலூர், தென்மலை, ஆரியங்காவு, கண்ணுபுளிமேட்டு, ஐந்தருவி, குற்றாலம் வனப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் குற்றாலம் ஐந்தருவியில் நேற்றிரவு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் கயிறு கட்டி சுற்றுலா பயணிகள் யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை. ஆனால், தண்ணீர் வேகம் ஒரு பக்கம் குறைந்தவுடன் சில பயணிகள் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அங்கு ஜோராக குளியல் போட்டனர்.
குற்றாலம் மெயினருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் அங்கும் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த வெள்ள பெருக்கில் சிலர் சிக்கினர்.
அவர்களின் அலறலை தொடர்ந்து பணியில் இருந்த போலீசார் மற்றும் பொது மக்களை காப்பாற்றினர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளபெருக்கில் வேறு யாராவது சிக்கினார்களா, என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளம் ஏற்பட்டவுடன் அருவிகளில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். காவல்துறை அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்த பின் மீண்டும் சப்ளை வழங்கப்பட்டது.