பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நெல்லை நபர் இன்று பலி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வள்ளவிளையை சேர்ந்தவர் ராமநாதன். இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
இந்நிலையில் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு வந்துள்ளார். இங்கு வந்ததும் காய்ச்சல் தீவிரமானதை அடுத்து அவர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பன்றிக் காய்ச்சலுக்குரிய வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று ராமநாதன் உயிரிழந்தார். அவரது உடல் அரசு பொது மருத்துவமனையில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதே போல் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் திசையன்விளை அருகே உள்ள புத்தன்தருவையை சேர்ந்த ராஜலிங்கம் என்பவரின் மகன் முத்துவேலும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள கடலைமிட்டாய் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 21 நாட்களாக காய்ச்சல் வாட்டியதால் உறவினர்கள் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கையில் கர்ப்பிணி பலி
இதற்கிடையே, சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், இளையாங்குடி சாலையூர் பகுதியைச் சேர்ந்த ரம்ஜான் அலியின் மனைவியான அப்பெண், 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். சமீபத்தில் அவருக்கு தீராத காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் நிமோனியா காய்ச்சல் அறிகுறி இருப்பதாகக் கூறியுள்ளனர்.
அதன்பிறகு, அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த குழந்தை அகற்றப்பட்ட நிலையில், அந்தக் குழந்தை இறந்தது. அப்பெண்ணுக்கு காய்ச்சல் குறையாத நிலையில், 10 நாள்களுக்கு முன் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்ததில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகக் கூறப்பட்டது. இந் நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை மாலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த அனைவருக்கும் சுகாதாரத் துறை சார்பில் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இதனால் அப்பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, இளையாங்குடி பகுதியில் பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்று ஏற்பட்டு உள்ளதா எனத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாகவும், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களுக்கு முன்னெச்சரிக்கையாக நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications