டெல்லியில் கன மழை : ஒரே இரவில் 11 பேர் பலி
புது டெல்லி: வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தீவிரமாக உள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை பலத்த மழை பெய்தது. அப்போது வீசிய பலத்த காற்றால் 13 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கொட்டித் தீர்த்த பேய் மழையால் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இதனால் நேற்றிரவு டெல்லி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றால் 4 இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால், மின்தடை ஏற்பட்டது.
தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
இந்த கன மழையால் 2 இடங்களில் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சாந்தினிசவுக், மான சரோவர் பூங்கா பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 6 பேர் பலியானார்கள். இதனால், டெல்லியில் மழைக்கு ஒரே இரவில் 11 பேர் பலியாகியுள்ளனர்.