சென்னை தொழில் அதிபர் வீட்டில் 300 பவுன் நகை, ரூ. 6 லட்சம் கொள்ளை
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பஸ் அதிபர் வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து கதவை உடைத்து 300 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
அத்தோடு ரூ. 6 லட்சம் ரொக்கப் பணத்தையும் சுருட்டி விட்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவி (35). இவர் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பாரதிவேலுவின் தம்பி மகன். சஞ்சீவியின் குடும்பத்தினருக்கு 4 பஸ் கம்பெனிகள் உள்ளன.
சஞ்சீவி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தாம்மாள் காலனியில் 2-வது தெருவில் மனைவி நிரஞ்சினி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர் குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றிருந்தார்.
இதனால் கார் டிரைவரை வீட்டை பார்த்துக் கொள்ளும்படி விட்டுச் சென்றார். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.6 லட்சம் ரொக்கம், 300 பவுன் தங்க, வைர நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
தகவல் அறிந்ததும் சஞ்சீவி சென்னைக்கு விரைந்து வந்தார். இது குறித்து தேனாம்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் கண்ணபிரான் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வீட்டின் பாதுகாப்புக்காக விட்டு சென்ற கார் டிரைவர் தலைமறைவாகி உள்ளார். அதனால், போலீசாரின் சந்தேகப் பார்வை அவர் மீது விழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications