தீபாவளி பண்டிகை: ரயில்களில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
நெல்லை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் வசதிக்காக டிக்கெட் முன்பதிவு இன்றுதொடங்குகிறது. டிக்கெட்கள் இடைதரகர்கள் கையில் சிக்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. முக்கியமான பண்டிகை என்பதால் நாட்டின் எந்த பகுதியில் வசித்தாலும் சொந்த ஊரில் இருந்து கொண்டாடவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்கூட்டியே பயண திட்டத்தை தயார் செய்து வருகின்றனர்.
தீபாவளிக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே அனைத்தும் முடிந்து விடுவது வழக்கமாக இருக்கிறது. டிராவல் ஏஜென்டுகள், புரோக்கர்கள், போலியான பெயர்களில் முன்பதிவு செய்கின்றனர். இதை தடுக்க பயண நாட்களில் பயணம் செய்யும் பயணியின் பெயரும், முன்பதிவில் உள்ள பெயரும் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். பெயர் சரி பார்ப்பதற்கு கண்டிப்பாக பயணிகள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டும்.
போலியான பெயரில் பயணம் செய்யும்போது சம்பந்தப்பட்ட பயணியின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் டிராவல் ஏஜென்டுகள், புரோக்கர்களை தடுக்க முடியும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.