கோவிலில் செக்ஸ் லீலை-அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
கோவிலுக்குள் அசிங்கமான முறையில் நடந்து கொண்ட தேவநாதனின் செயல்கள் அவரது வீடியோ செல்போன் மூலமாகவே வெளியுலகுக்குப் பரவியது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.
இவரது வழக்கை காஞ்சிபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தொய்வு காணப்படுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் மிகவும் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.
பூக்காரப் பெண் கலா, சபீதா, வள்ளி, தாரா ஆகிய நான்கு பெண்களுக்கும், தேவநாதனுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதேபோல தேவநாதனின் மனைவி தேவகங்காவும் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கை தற்போது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தற்போது இந்த வழக்கில் 8 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை காஞ்சிபுரம் டி.எஸ்.பி. ராஜேந்திரன் நேற்று காஞ்சிபுரம் 2வது கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ஸ்ரீகுமாரிடம் சமர்ப்பித்தார்.
தேவநாதன் மீது 153-ஏ (இந்துக்கள் மத உணர்வை புண்படுத்துதல்), 295 (பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்வது), 376 (கற்பழித்தல்), 506 (1) (கொலை மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பான ஆபாச சி.டி.க்கள், சென்னை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து அறிக்கை பெறப்பட்டது. அந்த முக்கிய அறிக்கைகளையும், குற்றப்பத்திரிக்கையுடன் சேர்த்து தாக்கல் செய்திருப்பதாக, ராஜேந்திரன் தெரிவித்தார்.