வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: பெண் உள்பட 3 பேர் மீது புகார்
பணகுடி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக பெண் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி மெயின் ரோட்டில் சன் கன்சல்டன்சி என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அந்தமான், ஹாங்காங் நாடுகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் மீன்பிடி நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி ஏராளமானோர் இந்த நிறுவனத்துக்கு நேரில் வந்தனர். அவர்களிடம் அந்த வேலை வாய்ப்பு நிறுவனத்தினர் ஹாங்காங் செல்வதற்கு ரூ. 19 ஆயிரமும், அந்தமான் செல்ல ரூ. 8 ஆயிரமும் கட்டணமாக கட்ட வேண்டும் என கூறினர்.
இதையடுத்து பலர் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணம் கட்டினர். பணம் கட்டியவர்களிடம் அந்த நிறுவனத்தினர் நேற்று பணகுடியில் உள்ள அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளனர். அப்படி வந்தால் ஹாங்காங் செல்கிறவர்களை திருவனந்தபுரத்தில் இருந்தும், அந்தமான் செல்பவர்களை சென்னையில் இருந்தும் விமானம் மூலம் அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். பணத்தை கட்டியவர்கள் ஆயிரம் கனவுகளுடன் அந்த நிறுவனத்துக்கு நேற்று காலை 5 மணிக்கு வந்தனர். ஆனால் அங்கு யாருமே இல்லை. நீண்ட நேரம் காத்திருத்தும் அந்த நிறுவனத்தார் ஒருவரையும் காணாததால் வந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம்பக்கம் விசாரித்ததில் எந்த விபரமும் கிடைக்காதபோது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. மேலும், அநத தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட விசிட்டிங் கார்டில் கீதா என்பவர் உரிமையாளர் என்றும், முத்து, ராஜா என்ற பெயர்களும் அச்சிடப்பட்டிருந்தன. இது மட்டுமின்றி அதில் செல்போன் எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தாங்கள் மோசம் போனதை அறிந்த பணம் கட்டியவர்கள் பணகுடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.