சேவூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது: மீட்புப் பணிகளால் மற்ற ரயில்கள் தாமதம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலால் அப்பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், மண்ணெண்ணெய் டேங்கர்களை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சூர் நோக்கிச் சென்றது.
காட்பாடி-திருவலம் ரயில் நிலையம் இடையே உள்ள சேவூர் ரயில்வே கேட் அருகே அதிகாலை 3.20 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று ரயில் தடம் புரண்டது.
என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டதோடு நின்றது. இது குறித்து காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து ஜோலார்பேட்டையில் இருந்து மீட்பு ரயில் என்ஜின் கொண்டுவரப்பட்டு காலை 6.10 மணி அளவில் தடம் புரண்ட பெட்டி மீட்கப்பட்டு சரக்கு ரயில் புறப்பட்டது.
இந்த சம்பவத்தால் தன்பாத், ஆலப்புழா பொக்காரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக சென்றது. மேலும், சரக்கு ரயில் பெட்டி மீட்பு பணிகளால் எதிர் டிராக்கில் வந்துகொண்டிருந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டது.
சரக்கு ரயிலில் சில டேங்கர்கள் காலியாக இருந்ததினால் ஏற்பட்ட அதிர்வு தான் பெட்டி தடம் புரண்டதற்கு காரணம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications