பிரபாகரனையும், குடும்பத்தையும் காக்க கடுமையாக முயற்சித்தோம்-கேபி

கேபி கொடுத்த பேட்டி என்று கூறி படிப்படியாக வெளியாகி வருகின்றன இலங்கை இதழ்களில். அந்த வகையில், டெய்லி மிரர் இதழுக்கு கேபி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
போர் பகுதியிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவுகளை பிரபாகரன் ஏற்கவில்லை. அவ்வாறு செய்தால் புலிகள் எளிதில் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனிடையே, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி என்னுடன் தொடர்பில் இருந்தார்.
மார்ச் 2009ல், போர்நிறுத்தம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டேன். புலிகள் வசமிருந்த பொன்னேரின், பரந்தன், யானைஇறவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளை இழந்ததும் பிரபாகரன் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், இது காலம் கடந்த முடிவாக இருந்தது.
பிரபாகரனை ஒரு கப்பலில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் யோசனையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவரது இந்த முடிவுக்கு காரணம் நார்வேயில் செயல்படும் புலிகளின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான நெடியவன் தான்.
இந்நிலையில், பிரபாகரன் மற்றும் குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறொரு பகுதிக்கு அழைத்துச் செல்லுமாறு அவரது மகன் சார்லஸ் ஆண்டனி கேட்டுக்கொண்டார். தான் போர்க்களத்தில் இருந்து தொடர்ந்து போரிடப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், இந்த முடிவையும் பிரபாகரன் ஏற்கவில்லை. போர்க்களத்தில் அவரும் தொடர்ந்து இருந்து போரிட விரும்பினார்.
கடைசி முயற்சியாக பிரபாகரனை ஹெலிகாப்டர் மூலம் வன்னி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லவும், அவரது குடும்பத்தினரை சர்வதேச கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு அழைத்துச் செல்லவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த திட்டமும் தோல்வியடைந்தது என்று கூறியுள்ளார் கேபி.












Click it and Unblock the Notifications