மருத்துவ நுழைவு தேர்வு: தமிழகத்தி்ன் கடும் எதிர்ப்பு-மத்திய அரசு கைவிடுகிறது?

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒட்டுமொத்த எதி்ர்ப்பையடுத்து இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாகத் தெரிகிறது.
நேற்று இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஒரே குரலில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவ பொது நுழைவுத் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிக்கை வெளியிடுவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துவிட்டது.
ராஜ்யசபாவில் இந்த விவகாரத்தைக் கிளப்பி திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில்,
தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்த பெருமை முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசையே சாரும். கிராமப்புற மாணவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைக்காததால் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது. எந்த விதமான தேவையான சூழ்நிலையும் உருவாகாத நிலையில் மீண்டும் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது.
மாநிலங்கள் சுயாட்சி கேட்கும் குரல் ஓங்கி ஒலிக்கின்ற இந்த கால கட்டத்தில் அரசியல் சட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
அதிமுக எம்பி மனோஜ் பாண்டியன் பேசுகையில், மருத்துவ படிப்புக்கு மீண்டும் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு தீர்மானித்து இருப்பது தமிழக மாணவர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு மாநில அரசின் உரிமையை பறிப்பதாக உள்ளது.
பொது நுழைவுத் தேர்வு நடத்துவது இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது என்பதால் மத்திய அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றார்.
அதிமுக எம்பி மைத்ரேயனும் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
மக்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும் இந்த பிரச்சனையை அதிமுக எம்பி தம்பிதுரை கிளப்பினார். அவர் பேசுகையி்ல், 2011ம் ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்து இருப்பது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது. எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
நாடு தழுவிய அளவில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் நிலையில் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் தமிழில் படிக்கும் மாணவ, மாணவிகள் எப்படி தேசிய அளவில் போட்டியிட முடியும் என்றார்.
இந் நிலையில் இந்த நுழைவுத் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொது நுழைவுத் தேர்வு முறை கூடாது என்று கூறி பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி கடிதமும் எழுதியுள்ளார்.
இதையடுத்து இந்த பொது நுழைவுத் தேர்வு முடிவை மத்திய அரசு கைவிடும் என்று தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக மருத்துவ பொது நுழைவுத் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிக்கை வெளியிடுவதை மத்திய அரசு நேற்று நிறுத்தி வைத்துவிட்டது.
மேலும் இது தொடர்பாக மாநில அரசுகளுடன் விரிவாக கலந்து ஆலோசனை நடத்த மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அதுவரை மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடைபெறாது. தற்போதைய சூழ்நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் (2011-12) மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நிச்சயமாக நடைபெறாது என்பது உறுதியாகி உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சுஜாதாராவ் கூறுகையில், அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். சிறிது காலத்துக்கு அது ஒத்தி போடப்பட்டுள்ளது.
பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை அமல்படுத்தும் முன்பு மாநில அரசுகளுடன் ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. எனவே மாநில அரசுகளுடன் ஆலோசிக்கப்படும்.
வரும் 30ம் தேதி மத்திய சுகாதார கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை சிக்கல் எதுவுமின்றி அமல் படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு இதன் மூலம் பாதிப்பு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது பற்றியும் ஆராயப்படும் என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications