கூட்டணியை இப்போதே முடிவு செய்ய முடியாது: பண்ருட்டி
தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது,
தேமுதிக தொடங்கிய நாளில் இருந்து தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. கூட்டணியைப் பொருத்த இப்போதே முடிவு செய்துவிட முடியாது. அரசியலில் ஒரு வாரம் என்பது நீண்ட காலமாகும்.
தேர்தல் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் தான் வெற்றித் தோல்வியை முடிவு செய்யும். எனவே, தேர்தல் சமயத்தில் தான் கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும். திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக உள்ளது.
திமுக ஆட்சி சரியில்லை என அதிமுகவை ஆதரிப்போம். பின்னர் அதிமுக ஆட்சி வந்ததும் அவர்கள் சரியில்லை என திமுகவை ஆட்சியில் அமர வைத்தால் அது சந்தர்ப்பவாதமாகிவிடும்.
கூடுகிற கூட்டம் எல்லாம் வாக்குகள் ஆகி விடாது. வருகிற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். எலக்ட்ரானிக் இயந்திரங்களை விட ஓட்டுச் சீட்டு முறைதான் சிறந்தது. அமெரிக்கா உள்ளி்ட்ட வளர்ந்த நாடுகள் இன்னமும் ஓட்டுச் சீட்டை தான் வாக்களிக்க பயன்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.