விசைப்படகு தொழிலாளர்கள் ஸ்டிரைக்கை தொடர முடிவு: 10 நாட்களில் ரூ. 10 கோடி நஷ்டம்
தூத்துக்குடி: இன்று முதல் மீன் பிடிக்கத் திரும்புவதாக அறிவித்திருந்த தூத்துக்குடி விசைப் படகு மீனவர்கள் மீண்டும் ஸ்டிரைக்கைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. படகு ஒன்றுக்கு 6 முதல் 18 மீனவர்கள் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். மேலும் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம் என இரு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
மீன்பிடி தொழிலாளர்கள் தங்களுக்குரிய பங்கு தொகையை 35 சதவிகிதத்தில் இருந்து 45 சதவிகிதமாக உயர்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.10 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்.டி.ஓ. மற்றும் மீன்துறை அதிகாரிகள் தலைமையில் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. மீன்பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் (23-ம் தேதி) விசைப்படகுகள் வழக்கம்போல் மீன்பிடிக்கச் செல்லும் என அறிவித்து மீன்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் விசைப்படகு தொழிலாளர் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்தனர்.
மேலும், நேற்று மாலை கடலுக்கு செல்ல ஆயத்தமான படகுகளுக்கு ஐஸ் கட்டிகளை ஏற்றிக் கொண்டு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்ற லாரிகளில் இருந்து அவற்றை இறக்க விடாமல் சிலர் தடுத்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையி்ல் போலீசார் மீன்பிடி துறைமுகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications