தாமதமான தீர்ப்பு, இருந்தாலும் மன நிறைவு அடைகிறோம்-3 மாணவிகளின் பெற்றோர் கருத்து

காலம் கடந்த தாமதமான தீர்ப்பு-கோகிலவாணி தந்தை:
உயிரோடு கருகிப் போன அப்பாவி மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறுகையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எதிர்பார்த்ததுதான், ஆனால் காலம் கடந்த தாமதமான தீர்ப்பு என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் பெரும் எதிர்ப்புகளையும் மீறி போராடியவர் வீராச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு குறித்து அவர் கூறுகையில், இந்தத் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் சம்பவம் நடந்து 10 ஆண்டுகாலம் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் பலர் முன்னிலையில் கண்கூடாக நடந்த சம்பவத்துக்கு இவ்வளவு காலம் கழித்து தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர்.
அதே நேரத்தில் இந்த விஷயத்தில் போராடிய அரசாங்கத்துக்கும், மாணவ மாணவிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் இந்த சம்பவத்தில் நடைபெறவே கூடாது என்று கூறியுள்ளார்.
தாமதமாக வந்தாலும் சந்தோஷம்-ஹேமலதா தாயார்:
இன்னொரு மாணவியான ஹேமலதாவின் தாயார் காசியம்மாள் கூறுகையில், வழக்கின் தீர்ப்பு தாமதமாக வந்தாலும் நான் சந்தோஷம் அடைகிறேன். என்னைப் போல பெற்றோர்கள் இனி இதுபோன்ற கொடுமையை சந்திக்க கூடாது. இந்த தண்டனையை நிறைவேற்றினால் ஓரளவாவது இனி குற்றங்கள் குறையும் என்றார்.
மனநிறைவு தருகிறது-காயத்ரியின் தந்தை :
காயத்ரியின் தந்தை வெங்கடேஷ் கூறுகையில், இன்று காலையில் இருந்தே பதட்டத்துடனும், வேதனையுடனும் இருந்தோம். இந்த தீர்ப்பு மனநிறைவை அளிக்கிறது. இது சரியான தீர்ப்பு. சேலத்தில் கொடுத்த தீர்ப்பு நிலை நாட்டப்பட வேண்டும் என்று நினைத்தோம்.
அதன்படி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. போலீசாருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications