தங்கபாலுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்-ஈவிகேஎஸ் ஆதரவு எம்எல்ஏ போர்க்கொடி
கோவை: சத்தியமூர்த்தி பவனில் குமாஸ்தாவாக வேலைபார்ப்போரெல்லாம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை நீக்க அதிகாரம் இல்லை. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதற்கு உடனடியாக தங்கபாலு விளக்கம் அளிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் மொடக்குறிச்சி எம்.எல்.ஏவும், இளங்கோவன் ஆதரவாளருமான பழனிச்சாமி.
காங்கிரஸில் கோஷ்டி மோதல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை கோஷ்டி கோஷ்டியாக திமுகவை விமர்சித்து வந்தவர்கள், தற்போது தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
கோவை ரேஸ்கோர்சில் உள்ள வைஷ்ணவ் வணிக வளாகத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தலைவர் முத்துக்குமார், ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவர் சரவணன், கோவை வேடப்பட்டி தங்கவேல், திருப்பூர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கோவையில் சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் முயற்சி எடுத்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து அனுமதி வாங்கிக்கொடுத்தார்.
ஆனால் அனுமதி வாங்கிக்கொடுத்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா கூட்டத்திற்கு அழைப்பு இல்லை. இதனால் கொதித்து எழுந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கோவை வரும் ப.சிதம்பரத்திற்கு கறுப்பு கொடி காட்டுவோம் என்று அறிவித்தார்கள்.
ஆனாலும் விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டதால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேண்டுகோளுக்கு இணங்க கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தை தள்ளிவைத்தோம்.
அதன்பிறகும் கோவை மாவட்ட காங்கிரசை சேர்ந்த யுவராஜ் உள்பட 6 பேரை கட்சியில் இருந்து நீக்கியதாக தாமோதரன் என்பவர் அறிவித்துள்ளார். இந்த தாமோதரன் யார் என்றே தெரியாது. இவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்க அதிகாரம் கொடுத்தது யார்? இது குறித்து காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விளக்க வேண்டும்.
இதற்கு முன்பு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவித்தபோது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் யுவராஜ் உள்பட 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.
காங்கிரஸ் கட்சி ஜனநாயக கட்சி. இந்த கட்சியில் இருக்கும் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் வட்டார கமிட்டி மற்றும் மாவட்ட கமிட்டியிடம் விளக்கம் கேட்க வேண்டும். அதன்பிறகு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி அவர்கள்தான் நடவடிக்கை எடுக்கமுடியும்.
ஆனால் சத்தியமூர்த்தி பவனில் குமாஸ்தாவாக வேலைபார்க்கும் தாமோதரனுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை நீக்க அதிகாரம் இல்லை. இதற்கு உடனடியாக தங்கபாலு விளக்கம் அளிக்க வில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications