நிரூபமா ராவைத் தொடர்ந்து ராணுவத் தளபதியும் இலங்கை விரைகிறார்
டெல்லி : மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவைத் தொடர்ந்து ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங்கும் இலங்கை செல்கிறார்.
இலங்கையில் தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கை மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் நான்கு நாள் கொழும்பு பயணத்தை மேற்கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் ராணுவத் தளபதி வி.கே.சிங்கும் கொழும்பு செல்கிறார். அதேபோலே ராணுவத்தின் பல்வேறு மட்டத்திலான தளபதிகளும் இலங்கை செல்லவுள்ளனராம்.
அதேபோல இலங்கையிலிருந்தும் ராணுவ தளபதிகள் இந்தியா வருகின்றனராம். இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடலோரப் பாதுகாப்பு போன்றவை தொடர்பாக இந்த பயணமாம்.
ராணுவத் தளபதியைப் போலவே விமானப்படை தளபதி பி.வி.நாயக், பாதுகாப்புத் துறை செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரும் இலங்கை செல்லவுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம்தான் கடற்படைத் தளபதி நிர்மல் வர்மா கொழும்பு சென்று திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.
வருகிற அக்டோபர் மாதம் இலங்கை ராணுவத் தளபதி இந்தியா வருகிறார். கருத்தரங்கில் பேசுவதற்காக அவர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த ஆண்டு இறுதியில் இலங்கை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications