மத்திய அரசுடன் பேரம் பேசவே கருணாநிதி மாநில சுயாட்சி கோரிக்கை: ஜெயலலிதா
சென்னை: மத்திய அரசுடன் பேரம் பேசுவதற்காகவே மாநில சுயாட்சி என்கிற ஆயுதத்தை முதல்வர் கருணாநிதி எடுத்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கல்வி, வரி விதிப்பு போன்ற துறைகளில் மாநில அரசின் உரிமைகளை பாதிக்காத வகையில் மத்திய அரசின் அணுகுமுறை இருக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்டது; காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பொன்னையாறு, பாம்பாறு என அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சனையில் நமக்குள்ள உரிமைகளை தாரை வார்த்தது, 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையால் மக்கள் பாதிக்கப்பட்டபோது, மாநில அரசை முற்றிலும் புறக்கணித்தது,
ராஜிவ் காந்தி மறுவாழ்வு திட்டத்தை பொதுத் துறை வங்கிகள் மூலம் செயல்படுத்த மத்திய அரசை தூண்டியது, 150 மெகாவாட் திறனுடைய பைக்காரா இறுதி நிலை புனல் மின் திட்டத்தை நீலகிரி மாவட்டத்தில் ஏற்படுத்த முட்டுக்கட்டை போட்டது,
எனது ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி அதைத் தடுத்து நிறுத்தியது,
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒப்புதலைத் தராமல் தடைக் கற்களை ஏற்படுத்தியது என மாநிலத்திற்கு எதிரான கருணாநிதியின் செயல்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
இது மட்டுமல்லாமல், தனியார் கல்லூரிக்கு இட ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிய போது, இட ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்ற வகையிலும், நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் உரிமையை மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என்ற வகையிலும் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று 2005ம் ஆண்டு பிரதமரை நான் வலியுறுத்திய போது, மெளனம் சாதித்தவர் கருணாநிதி.
அண்மையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு என்று மத்திய அரசு அறிவித்தபோது, அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் கடிதம் எழுதியவர் கருணாநிதி.
கருணாநிதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், வாட் வரியை 1.1.2007 முதல் செயல்படுத்தினார். இதன் விளைவாக, தமிழக அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, மாநிலத்தின் வரி விதிக்கும் உரிமையும் பறிபோய் இருக்கிறது.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டால் மாநில அரசுக்கு எந்த வரி விதிக்கும் உரிமையும் இல்லாமல் போய்விடும்.
கருணாநிதி ஆட்சி தொடர்ந்தால், 69 விழுக்காடு இடஒதுக்கீடு உட்பட தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய் விடக்கூடிய நிலைமை ஏற்படும்.
தற்போது மத்திய அரசுடன் பேரம் பேசுவதற்காக 'மாநில சுயாட்சி" என்கிற ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications