கெட்டுப் போன சாம்பார் சாப்பிட்ட கருணை இல்ல குழந்தைகள் 33 பேருக்கு வாந்தி மயக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி கருணை இல்லத்தில் நேற்று அதிகாலை 33 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுஸ்போர்டு காலனியில் அன்னை கருணை இல்லம் உள்ளது. இங்கு 60க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை இங்குள்ள குழந்தைகளுக்கு ஒருவர் பின் ஒருவராக வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் 10 வயது முதல் 15 வயதுள்ள சிறுவர், சிறுமிகள் ஆவர். மொத்தம் 33 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சில குழந்தைகள் புற நோயாளியாக சிகி்ச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் குழந்தைகள் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட சாம்பார் சாதம் கெட்டுப் போனதாக இருந்ததால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications