அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பெண்ணுக்கு வலைவீச்சு
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையை போட்டு விட்டு தலைமறைவான பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவு அருகே குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை கிடந்தது.
குழந்தையை மீட்ட ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த குழந்தை யாருடையது என அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் அந்த குழந்தையை ஒரு மூதாட்டியும், இளம்பெண்ணும் விட்டுச் சென்றதாகத் தெரிய வந்தது.
இது குறித்து மருத்துவமனை உறைவிட மருத்துவர் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குழந்தையை வி்ட்டுச் சென்ற மூதாட்டியையும், இளம்பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மீட்கப்பட்ட அந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்குள்ளேயே வந்து ஆண் குழந்தை அனாதையாக விட்டுச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.