பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இன்றைய (1.9.2010) காலை பத்திரிகையில், குறுவை சாகுபடி பாதிக்கும், சம்பாவுக்கு வாய்ப்பில்லை, கடைமடைக்குத் தண்ணீர் இல்லை என்ற தலைப்பில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியாகியுள்ளது.
உண்மை நிலை பின் வருமாறு:
போதிய நீர் வரத்து இல்லாததால், வழக்கமாக ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, ஜூலை 28-ந்தேதி திறக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டும் இதே தேதியில்தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2009 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் ஆகஸ்டு 31 வரை கர்நாடகத்திலிருந்து 81 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கப் பெற்றது. ஆனால் இந்த ஆண்டு இதே காலத்தில் 39 டி.எம்.சி. தண்ணீரே கிடைக்கப் பெற்றது. அதாவது, சென்ற ஆண்டை ஒப்பிடும்போது பாதியை விடக் குறைந்த அளவு தண்ணீரே கிடைக்கப் பெற்றுள்ளது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் பிரதமருக்கும் இதுபற்றிக் கடிதம் எழுதி, மத்திய அரசு இதில் தலையிட்டு காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடகா உடனே தண்ணீரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆகஸ்டு மாதம் முழுவதும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், மேட்டூரிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் அளவு 10,000 கன அடியில் ஆரம்பித்து பின்பு 8,000 கன அடியாகக் குறைத்து வழங்கப்பட்டு வந்தது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் ஆட்சித்தலை வர்களின் வேண்டுகோ ளின்படி இன்றிலிருந்து 12,000 கன அடி தண்ணீரை வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
தொடர்ந்து சம்பா சாகுபடி சிறப்பாக நடை பெறத்தேவையான அளவு தண்ணீரை வழங்க தமிழக அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.