பாறாங்கற்களை வைத்து ரயில்களை கவிழ்க்க பயங்கர சதி
திருப்பூர்: திருப்பூர் அருகே பாறாங்கற்களை தண்டவாளத்தில் வைத்து ரயில்களைக் கவிழ்க்க நடந்த சதி கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.
சென்னையில் இருந்து கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு விஜயமங்கலத்தை தாண்டி ஊத்துக்குளி ரயில் நிலையம் அருகே வந்தபோது, என்ஜின் சக்கரத்தில் பயங்கர சத்தம் கேட்டது.
ரயிலை கவிழ்ப்பதற்காக மர்ம ஆசாமிகள் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்துள்ளனர். ஆனால் என்ஜின் சக்கரம், கல்லை நொறுக்கி தள்ளி இடத்தைக் கடந்ததால் பெரும் சப்தம் கேட்டுள்ளது.
பெரும் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக ரயிலும், அதில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகளும் தப்பியுள்ளனர்.
என்ஜின் டிரைவர் ஊத்துக்குளி ரயில் நிலையத்துக்கு வந்து நிலைய அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பின்னால் ஒரு சரக்கு ரயில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ஏற்கனவே கல் வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு அருகே இருந்த மற்றொரு தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல் இருப்பதை சரக்கு ரயில் என்ஜின் டிரைவர் கவனித்தார். இது குறித்து உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த பெரிய பாறாங்கல்லை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் இன்டர்சிட்டி ரயில் ஏறியதால் உடைந்த பாறாங்கற்களையும் அங்கிருந்து போலீசார் அகற்றினார்கள்.
கற்களை அகற்றும் பணிகள் முடியும்வரை திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் திருவனந்தபுரம் மெயில் திருப்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் திருவனந்தபுரம் மெயில் புறப்பட்டு சென்றது. அதைத்தொடர்ந்து புளுமவுண்டன் எக்ஸ்பிரஸ் ரயிலும் சென்றது.
இது ரயிலை கவிழ்க்க நடந்த முயற்சியே என்று போலீஸார் கூறுகின்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மோப்ப நாய் அருகே உள்ள தோட்டத்துக்குள் ஓடி நின்றது. இதையடுத்து அங்கு மறைந்திருந்த ஒரு வாலிபர் வேகமாக ஓட முயற்சித்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ஊத்துக்குளி-விஜயமங்கலம் இடையே ரயிலை கவிழ்க்கும் வகையில் நடந்த 3-வது சம்பவம் இதுவாகும். இதேபோல் ஊத்துக்குளி-ஈரோடுக்கு இடையே நடக்கும் 5-வது சம்பவமாகும். ஆனால் இத்தனை முறை ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் நடந்தும் கூட யாரையும் இதுவரை போலீஸார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications