சென்னையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
சென்னை: சென்னையில் பிரபல ரவுடி நடுரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஒரு கும்பல் வீடுகளை சூறையாடிதால் பதட்டம் நிலவுகிறது.
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த சக்திவேல் (37) அந்தப் பகுதியின் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது கொலை, வழிப்பறி உள்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டு வேப்பேரி போலீஸ் நிலையம் பின்புறமுள்ள சாலையில் மார்வாடி ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளை வழக்கில் சக்திவேல் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இவர் சமீபத்தில்தான் வெளியில் வந்தார். கொள்ளையடித்த பணத்தை பங்கு போடுவதில் சக்திவேலுக்கும் மற்ற கொள்ளையர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது.
தப்பியோடி சக்திவேலை அந்தக் கும்பல் விரட்டி விரட்டி கழுத்து, வாய் உள்ளிட்ட வெட்டி வீழ்த்தியது. இதில் மயங்கி விழுந்த சக்திவேலின் நெஞ்சில் கத்தியால் குத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பிவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
சக்திவேல் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் ஒரு கும்பல் அப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்டது. இப் பகுதியில் வசிக்கும் செல்வம், மாதவன் ஆகியோரது வீடுகளும் மாதவனின் கேபிள் டி.வி. அலுவலகமும் சூறையாடப்பட்டன.
தகவல் கிடைத்து போலீசார் அங்கு விரைந்தனர். அதற்குள் அந்தக் கும்பல் ஓடிவிட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.
சக்திவேலுக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் தாதா ஒருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இரு தரப்பினருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் நடந்த மோதலில் சக்திவேலின் சகோதரி ரமணிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து எதிர் தரப்பினரை சக்திவேல் தாக்கியுள்ளார்.
அவரை பெண் தாதா கும்பல் கொலை செய்ததா அல்லது கொள்ளையடித்த பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீடுகள் சூறையாடப்பட்ட செல்வம், மாதவன் ஆகியோரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications