காங்கிரசுக்கு 110 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் வேண்டும்- இளங்கோவன்
ஈரோடு: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 110 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் வேண்டும் என்று கூட்டணிக் கட்சியிடம் கேட்குமாறு காங்கிரஸ் தலைமையை வலியுறுத்துவோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.
மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிக்கும் 10 பேர் கொண்ட குழு காங்கிரஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களது நியமன படிவங்களை இளங்கோவன் ஆதரவு எம்எல்ஏவான ஆர்எம்.பழனிச்சாமி, இளங்கோவனிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன்,
தமிழகத்திலேயே மொடக்குறிச்சி தொகுதியில்தான் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடிதோறும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் மக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை சோனியா காந்தி விரைவில் நியமனம் செய்யவுள்ளார். பின்னர் அனைத்து சட்டப் பேரவை தொகுதிகளிலும் இதுபோன்ற குழுவை அமைக்க வேண்டும் என்று புதிய தலைவரிடம் வலியுறுத்தப்படும்.
மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பல பகுதிகளில் உரிய கூலி தரப்படுவதில்லை என்று புகார் தெரிவித்திருந்தேன். இதற்கு முதல்வர் அல்லது தலைமைச் செயலரிடரிமிருந்து வரும் பதிலே சரியானதாக இருக்க முடியும். ஆனால் முன்னாள் அமைச்சர் என்கேகே.பெரியசாமி, இத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை எனவும், கடந்த 1980ல் ஏற்பட்டது போன்ற நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.
அவருக்கு, நான் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
இளங்கோவனைக் கட்சியில் இருந்து நீக்குவேன் என்று சொல்லவில்லை என தங்கபாலு தெரிவித்துள்ளார். இதனால் அவர் குறித்தும் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தங்கபாலுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
கூட்டணியில் புதிய கட்சிகளைச் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள தென்னை நலவாரியப் பொறுப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டவில்லை.
குமரிஅனந்தன் தலைவராக உள்ள பனைத் தொழிலாளர் நல வாரியத்தில், முக்கிய முடிவுகள் அனைத்தையும் அதிகாரிகளே எடுக்கின்றனர். எந்த அதிகாரமும் இல்லாத தலையாட்டி பொம்மைப் பதவிகள் காங்கிரஸ் தலைவர்களுக்குத் தேவையில்லை.
தேர்தல் கூட்டணி குறித்து சோனியா காந்தி முடிவு செய்வார். சட்டப்பேரவைத் தேர்தலில் 110 தொகுதிகளையும், ஆட்சியில் பங்கும் கூட்டணிக் கட்சியிடமிருந்து கேட்டுப் பெறவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவோம் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications